மாஞ்சோலைப் படுகொலை (1999) – அரச பயங்கரவாதத்தின் கொடூரம்!

மாஞ்சோலைப் படுகொலை (1999) – அரச பயங்கரவாதத்தின் கொடூரம்!

தமிழகத்தில் நடந்த அரச பயங்கரவாதப் படுகொலைகளில் ஜூலை 23, 1999 ம் ஆண்டு நடைபெற்ற திருநெல்வேலி மாஞ்சோலைப் படுகொலை வாரலாற்றில் மறக்க முடியாத கரும்புள்ளி. அன்றைய திமுக அரசின் காவல்துறை நிகழ்த்திய மனித தன்மையற்ற அடக்குமுறையால் தங்கள் அடிப்படை உரிமைக்குப் போராடிய பட்டியல் சமூகத்தை சார்ந்த 17 தொழிலாளிகள் படுகொலைக்கு உள்ளானர்கள்.

மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசிடம் இருந்து மும்பையை சேர்ந்த ஒரு பனியா மார்வாடி முதலாளியிடம் நியாயமற்ற விலைக்கு குத்தகைக்கு தரப்பட்டிருந்தது. அங்கு வேலை செய்த மக்களோ பெரும்பாலும் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர். கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டும், மிகக் குறைந்த கூலி வழங்கப்பட்டும் கொடுமைகளுக்கு உள்ளான தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினர். ரூபாய் 56 என்றிருந்த தினக்கூலியை உயர்த்தி ரூபாய் 150-ஆக தருமாறும், எட்டு மணிநேர வேலை, முதலிய தொழிலாளர் சட்டங்ககளை நடைமுறைப் படுத்த வேண்டியும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஜூலை 23-ம் தேதி மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு கொடுக்க குடும்பத்துடன் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை, தாமிரபரணி கரையின் குறுகிய பகுதியை அடைந்த போது காவல்துறை திடீரென அடித்து விரட்டத்தொடங்கியது. செய்வதரியாமல் ஓடிய மக்கள் அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றில் குதித்து மறுபுறம் சென்றடைய முயன்றனர்.

ஆனால் மறுபுறம் காத்திருந்த காவல் துறையினர் அவர்களை கரை ஏற விடாமல் அடித்தனர். மேலும் தண்ணீருக்குள் தத்தளித்த மக்களை நோக்கி பெரும் கற்களை எறிந்து தாக்கினர். மக்கள் மீது கண் மூடித்தனமாக ‘லத்தி சார்ஜ்’ செய்து, ஒரு முறை துப்பாக்கியால் மக்களை நோக்கி சுட்டனர். கரை ஏறிய மக்களை அடித்து நதிக்குள் தள்ளி கொலை செய்தது மட்டுமல்லாமல் ஒரு கைகுழந்தையையும் தண்ணீரில் தூக்கி போட்டு கொன்றிருந்தனர்.

ஊர்வலத்தில் காவல்துறை படுகொலைகள் ஒரு புறம் இருக்க, கரையில் இருந்த தொழிலாளர்கள் கடுமையாக அடித்து காயபடுத்தப்பட்டிருந்தனர். ஏறத்தாழ 500 பேருக்கும் மேல் காயமுற்று கிடந்த நிலையில் பலரை காவல்துறை தேடித்தேடி கைது செய்தது. பெண்களை ஆடைகளை உருவி அவமானப் படுத்தியது. எல்லோரையும் சாதி சொல்லி “உனக்கெல்லாம் போராட்டம் ஒரு கேடா? இனி போராடுவாயா?” என்று கேட்டும், பெண்களை தகாத சொற்களால் திட்டியும் காவல்துறையினர் தங்கள் சாதி ஆணவத்தை வெளிக்காட்டினார். மேலும் அருகில் இருந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தவர்களை வீடு புகுந்து தாக்கினர்.

அரசோடு கைகோர்த்த மருத்துவர்கள், படுகொலைக்கு உள்ளான 17 பட்டியல் சமூக தொழிலாளர்களின் உடற்கூறாய்வில் ‘அனைவரும் தண்ணீரில் மூழகித்தான் இறந்தார்கள்’ என்று அறிக்கை தந்தனர். எனவே இறந்தவர்கள் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து மறு உடற்கூறாய்வு செய்ய கோரிக்கை வைத்தனர். ஆனால் திமுக அரசோ மறு உடற்கூறாய்வு செய்யாமல், இறந்தவர்கள் உடலை உறவினர்கள் யாருமின்றி தாமே புதைத்தது.

அதுமட்டுமல்லாமல் “மக்கள்தான் முதலில் காவல்துறையினரை முதலில் தாக்கினர்” என்று அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி அறிவித்தார்.

இன்று நாம் கண்முன்னே அதிமுக – பாஜக அரசால் நடைபெற்ற ஸ்டெர்லைட் நிறுவனத்திற்காக நடந்த துப்பாக்கி சூட்டிற்கு எந்த விதத்திலும் குறையாத கொடூரம் மாஞ்சோலைப் படுகொலை என்றால் மிகையாகாது. யார் அதிகாரத்தில் இருந்தாலும் உழைக்கும் மக்கள் உரிமைக்குரலை நசுக்கவே பார்ப்பார்கள் என்பதை இந்த இரு சம்பவங்களும் எடுத்துரைக்கின்றன.

பட்டியல் சமூக மக்கள் என்பதாலும், உழைக்கும் வர்க்கம் என்பதாலும் விரட்டி விரட்டி கொல்லப்பட்ட மாஞ்சோலை தொழிலாளின் நினைவுநாளில் போராடிய மக்களை நினைவு கூறுவதுடன், படுகொலை செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்கத்தை மே பதினேழு இயக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply