
இலங்கை பற்றிய ஐ.நாவில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட திர்மானம் தமிழர்களின் கோரிக்கையை உள்ளடக்கியதல்ல. அது ஐ.நா மனித உரிமை அவை முன்மொழிந்தவற்றை உள்ளடக்கியவையும் அல்ல, இலங்கையை கடுமையான நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானமுமல்ல. இப்படியாக நீர்த்துபோக செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தை கூட மோடி அரசால் ஆதரிக்க இயலாது என்பதே பாஜகவின் தமிழின விரோதத்திற்கு சாட்சி. ஆயிரம் தமிழர் கோவில்கள் உடைக்கப்பட்டதை கண்டுகொள்ளாத போலி கூட்டம், இனப்படுகொலைக்கு நீதிகிடைக்க எப்படி உடன்படும். காங்கிரஸ் கட்சிக்கு எவ்வகையிலும் வேறுபட்டதல்ல பாஜக. தனது பிராந்திய நலனை அடிப்படையாகக் கொண்டு மேற்குலகம் கொண்டுவரும் இத்தீர்மானம் அமெரிக்கா-பிரிட்டன் தலைமையிலான இராணுவ கூட்டுறவிற்காக தமிழர் கோரிக்கைகளை பேரம்பேச பயன்படுத்துகிறது. தெற்காசிய கடலில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிலைநாட்ட பயன்படுத்தப்படும் தீர்மானத்தை பற்றிய விவாதத்தில் சாதுர்யமாக ஒதுங்கி இலங்கைக்கான ஆதரவை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது. தனது ஆதரவு தளத்தில் இருக்கும் அணிசேரா நாடுகளை இலங்கைக்கு ஆதரவாக நகர்த்தி அனைவருக்கும் நல்லவனாக முயலும் மோடி அரசு, தமிழரை வஞ்சிப்பதில் முதன்மையாக நிற்கிறது. இதனாலேயே இந்திய வெளியுறவு கொள்கை பற்றிய பார்வை தமிழக கட்சிகளுக்கு வேண்டுமென மே17 இயக்கம் தொடர்ந்து பேசி வருகிறது. ஆரிய கட்சிகளின் பிடியில் வெளியுறவு கொள்கை இருக்கும்வரை தமிழின துரோகம் தொடர்ந்து கொண்டிருக்கும். இலங்கை மீதான வெளியுறவு கொள்கையை வடிவமைப்பதில் தமிழக சட்டசபையின் பங்கு முக்கியமானது என்பதை இனிமேலாவது உரக்க சொல்வோம். – தோழர் திருமுருகன் காந்தி