தமிழக எடப்பாடி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த பாஜகவின் பினாமியாக செயல்படும் தமிழக எடப்பாடி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை பெத்தானியாபுரத்தில் 27/05/17 சனிக்கிழமை மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது.

மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் தமிழ் உள்ளிட்ட 17 பேரின் கைதுகளைக் கண்டித்தும், நினைவேந்தல் எங்கள் பண்பாட்டு உரிமை என்றும் முழக்கமிட்டனர்.

கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற பண்பாட்டு உரிமையான நினைவேந்தல் நிகழ்வை மெரீனாவில் நடத்த தடை போடுவதென்பது சர்வதேச சட்டங்களின் படி உரிமை மீறல் என்று தெரிவித்தனர். நினைவேந்தல் உரிமையை மீட்டெடுப்போம் என்றும், ஒவ்வொரு ஆண்டும் எத்தனை அடக்குமுறை வந்தாலும், தொடர்ந்து தமிழர் கடலான மெரீனாவில் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தற்போதைய தமிழக அரசு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் அடியாளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழீழ இனப்படுகொலையில் இந்திய அரசும் கூட்டாளியாக இருப்பதால் இந்த நினைவேந்தலை ஒவ்வாமையுடன் பார்க்கிறது. இந்து முன்னணியினர் கோவையில் கலவரத்தில் ஈடுபட்ட போது அமைதியாக வேடிக்கை பார்த்த தமிழக அரசின் காவல்துறை, அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்த வந்தவர்களை வன்முறையாளர்கள் என்கிறது. தோழர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. 6 ஆண்டுகளாக மெரீனாவில் தொடர்ந்து நடந்து வந்த நினைவேந்தலை தற்போது தடுக்க முயற்சித்ததன் பின்னணியில் பாஜக இருப்பதை அனைத்து தோழர்களும் குறிப்பிட்டுப் பேசினர்.

17 தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர்
தோழர் கனியமுதன், தமிழக மக்கள் விடுதலைக்கட்சி நிறுவனர் தோழர் முருகவேல்ராஜன்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் கதிரவன்,தமிழர் விடியல் கட்சியின் தோழர் வில்லியம்ஸ்,திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தீலிபன் செந்தில்,தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கிட்டுராசா,நாணல் நண்பர்கள் தோழர் பூபதிராஜ்,உயர்நீதிமன்றத்தில் தமிழ் தோழர் பகத்சிங்,புரட்சி கவிஞர் பேரவை ஐயா கற்பூரம் நாகராஜன்,தமிழ் தமிழர் இயக்கத்தின் தோழர் பரிதி,வழக்கறிஞர் தோழர் ரஜினிஉள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், இளைஞர்களும், உணர்வாளர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

Leave a Reply