கூடங்குளத்தில் 5, 6வது அணு உலைகள் மற்றும் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!

கூடங்குளத்தில் 5, 6வது அணு உலைகள் மற்றும் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தமிழர்களின் கடும் எதிர்ப்பை மீறி கொண்டுவரப்பட்ட முதல் 2 அணு உலைகள் சரிவர செயல்படாத நிலையில், மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு 3 மற்றும் 4வது என மேலும் இரண்டு உலைகளுக்கு அனுமதியளித்து அதன் கட்டுமானப்பணிகள் பாதியளவு நிறைவடைந்துள்ளன. இது தென் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், தற்போது கூடங்குளம் அணு உலை வளாகத்தில் 5வது 6 வது என மேலும் இரண்டு அணு உலைகளை அனுமதித்து அதற்கான கட்டுமானப்பணிகள் துவங்கியுள்ளனர். மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைகொள்ளாமல், மக்களின் குரலை உதாசீனப்படுத்தி, அணு உலைகளை அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்திய ஒன்றிய அரசின் போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கூடங்குளத்தில் அணு உலை அமைக்க ரசியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்ட நாள் முதல் இன்று வரை கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக அதன் சுற்றுவட்டார மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். மக்களின் கடும் எதிர்ப்பை மீறி முதல் அணு உலைகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் வேளையில் இந்த எதிர்ப்பு உச்சநிலையை அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் அணு உலையை திறப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. மே பதினேழு இயக்கம் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியும், பல போராட்டங்களில் பங்கேற்கவும் செய்தது. அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் சார்பாக இடிந்தகரையில் 1000 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடைபெற்றது. அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளிய இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும், அணு உலைகளை திறந்ததோடு, 3வது 4வது அணு உலைகளுக்கும் அனுமதியளித்து கட்டுமானப் பணிகளை துவங்கியது.

முதல் இரண்டு அணு உலைகள் முறையே 2013 மற்றும் 2016-இல் மின் உற்பத்தியை துவங்கியது முதல் இன்று வரை அதன் முழு கொள்ளளவில் இயக்கப்பட்டதே இல்லை. மேலும், பல முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல மாதங்கள் வரை இயக்கப்படாமல் இருந்துள்ளன. அணு உலை தொழில்நுட்பத்தை அளித்த ரசியா, அதன் பாதுகாப்பு பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள, இந்திய அரசோ பொறுப்பை எடுத்துக்கொள்ள சிரத்தை எடுக்கவில்லை. அணு உலை கழிவுகளை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் கூடத்தை இதுவரை அமைக்காததும், AFR எனப்படும் அணு உலைக்கு அருகில் அமைக்கப்படக் கூடாது என்ற முக்கிய பாதுகாப்பு விதியை மீறி, கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே அணுக்கழிவு சேமிப்பு கூடம் அமைக்கப்படும் என்று இந்திய அணுசக்திக் கழகம் கூறியுள்ளது. மேலும், அணுக்கழிவு கூடம் அமைத்தல், அணுக்கழிவை கையாளுதல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றிற்கான தொழில்நுட்ப அறிவு இந்திய அறிவியலாளர்களுக்கு இல்லை என்று இந்திய அணுசக்திக் கழகமே உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இப்படியாக முதல் இரண்டு அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த குளறுபடிகளே தீர்க்கப்படாத நிலையில், 3வது 4வது என மேலும் இரண்டு அணு உலைகளுக்கு அனுமதியளித்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், தற்போது 5வது 6வது அணு உலைகளுக்கு அனுமதி அளித்து கட்டுமானப்பணிகள் துவங்கியுள்ளன. ஜப்பானின் ஃபுகிஷிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய தாக்கமும், கதிரியக்கம் பாதித்த பொருட்களை கையாள முடியாமல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஜப்பான் நாடே இன்று வரை திணறுவதை காண்கிறோம். அந்நிகழ்விற்கு பிறகு, அணு உலை தொழில்நுட்பத்தை மறுத்து உலக நாடுகள் இயற்கை முறையிலான மறுசுழற்சி ஆற்றலை நோக்கி செல்ல துவங்கிவிட்டது. ஆனால், இந்தியாவோ அணு உலைகளை அதிகரித்துக்கொண்டே செல்வது, ஒன்றிய அரசிற்கு மக்கள் மீது, குறிப்பாக தமிழர்கள் மீது அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இது போன்று ஒரே இடத்தில் பல அலகுகளை கொண்ட அணு உலைப் பூங்கா அமைப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலானது. தென் தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு இதன்மூலம் கேள்விக்குறியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் அமையவிருந்த 6000 மெகாவாட் அணு உலை பூங்கா, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஆந்திரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், தமிழர்கள் எவ்வளவு போராடினாலும் கூடங்குளத்தில் அணு உலைகளை ஒன்றிய அரசு அதிகரித்துக்கொண்டே செல்வது உள்நோக்கம் உடையதாக தெரிகிறது. “ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் போன்ற அணுஉலைகள், சேலம் 8 வழிச்சாலை இதையெல்லாம் மத்திய அரசு தமிழகத்தின் மீது நடத்தக்கூடிய ரசாயன தாக்குதலாக அமைந்திருக்கிறது” என்று, கடந்த மார்ச் 28 அன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.

முதல் இரண்டு அணு உலைகளே பாதுகாப்பற்ற சூழலை உண்டாக்கியுள்ள நிலையில், கூடங்குள அணு உலை வளாகத்தில் மேற்கொண்டு அணு உலைகள் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். 5வது, 6வது அணு உலை கட்டுமானப்பணிகளை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதி முடிக்கப்பட்ட 3வது 4வது அணு உலை கட்டுமானப் பணிகளையும் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. பாதுகாப்பற்ற முறையில், தமிழ்நாட்டை மேலும் வஞ்சிக்கும் வகையில் அணு உலை வளாகத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.

கூடங்குளம் அணு உலை வளாகம் மூடப்படுவதே தமிழர்களுக்கு பாதுகாப்பான சூழலை கொடுக்கும். இந்தியாவில் அதிக காற்றாலைகள் கொண்ட இப்பகுதியில், காற்றாலைகள் மூலம் அதே அளவிலான மின்சாரத்தை மறுசுழற்சி ஆற்றலாக பெற முடியும் எனும் போது, ஆபத்தான அணு உலைகள் ஏன் தேவை என்ற கேள்வி எழுகிறது. உலகம் மறுசுழற்சி ஆற்றலை நோக்கி செல்லும் போது, நாம் எதிர் திசையில் பயணிப்பது அறிவியல்பூர்வ செயலாகவோ, சுற்றுச்சூழலுக்கு நன்மைபயக்கக்கூடிய செயலாகவோ இருக்க முடியாது. மக்களின் நீண்டகால போராட்ட உணர்விற்கு மதிப்பளித்து, கூடங்குளம் அணு உலை வளாகத்தை இழுத்து மூட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply