திலீபனுடன் ஐந்தாம் நாள்

திலீபனுடன் ஐந்தாம் நாள்

19.09.1987

ஐந்தாவது நாள் வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலிமிருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறையத் தொடங்கிவிட்டனர். இன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றார். அவரால் எழும்ப முடியவில்லை உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்திலே வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம் போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம் பெற்றிருக்கின்றன. ‘திலீபன் உடல் நிலை மோசமாகி வருகிறது அவர் கடைசியாக சிறுநீர் கழித்து 48 மணித்தியாலங்களுக்குள் மேலாகிவிட்டது. இதே நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சிறுநீர் கழியாவிட்டால் அவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படலாம்’ என்று ஒரு பத்திரிகையில் போட்டிருந்தர்கள். வேறு ஒரு பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந்தது. “திலீபன் சோர்ந்து வருகிறார்… ஒரு மெழுகுவர்த்தியைப் போல் அவர் தமிழினத்துக்காக சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார்… அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது.

இருதயம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.” பத்திரிகைகளைப் படிக்கும் போது என் கைகளுடன் சேர்ந்து உள்ளமும் நடுங்கியது. திலீபன் என்றோர் இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்துக்கு வந்துவிட்டோம் என்பது போன்ற பிரமை எனக்கு ஏற்படுகிறது. அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாக கலந்து வந்து என் காதில் விழுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பது தான் அது… புலிகள் சார்பாக திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால்.

பிரதமர் ராஜீவ் காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா? என்ற நப்பாசையில் அதைப்பற்றி அறிவதற்காக பிரதித் தலைவர் மாத்தயாவிடம் செல்கிறேன். அங்கு அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘எந்தவிதமான அழைப்பும் வரவில்லை வழக்கம் போல சாதாரண விசயங்களைக் கவனிக்கதான் திலகர் போயிருக்கிறார். என்று மாத்தயா சொன்னதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது. திலகரின் இந்தியப் பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும்… ஆனால்? விதியே உன் கரங்கள் இத்தனை கொடியதா! பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கல,கலவென்று சிரித்துக்கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவதுதான் உன் கோரமுடிவா? அப்படி அவன் என்ன குற்றம் செய்துவிட்டான்?

-தமிழினத்துக்காக தன் வைத்தியப் படிப்பையே உதறி எறிந்தேனே…அது குற்றமா?

-தமிழினத்துக்காக தனது தந்தை, சகோதர்களைப் பிரிந்து வந்தேனே…. அது குற்றமா?

-தமிழினத்துக்காக இரவு பகல் பாராமல் மாடாக உழைத்தானே… அது குற்றமா?

– தமிழினத்துக்காக தன் வயிற்றிலே உள்ள குடலின் 14 அங்குலத்தை வெட்டி எறிந்தானே… அது குற்றமா?

-தமிழினத்துக்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக்கொண்டு, உண்ணாவிரதம் இருக்கிறானே… அது குற்றமா?

– எது குற்றம்….?

வானத்தைப் பார்த்து வாய்விட்டுக் கத்த வேண்டும் போல் இருக்கிறது. கதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கடந்த 5 நாட்களாக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்களே… யாருக்காக?… திலீபனுக்காக.. தமிழினத்துக்காக… அப்படியிருக்க… அந்தக் கண்ணீரை… ஏக்கத்தை… இன்னும் யாருமே புரிந்துகொள்ளவில்லையே? ஏன்? உலகில் மனிததர்மமே செத்துவிட்டதா? காந்தி இறந்ததற்காக கண்ணீர்வடிக்கும் இந்த உலகம், காந்தியத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா? அல்லது கண்டும் காணாமலும் போய்விட்டதா? எத்தனையே முறை திலீபன் சாவின் விளிம்பிலிருந்து தப்பியிருக்கின்றான்… எண்பத்தி மூன்றாம் ஆண்டு அவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் நவாலிப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்த போது ஒரு நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று நவாலிப் பொதுமக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென இரண்டு ஜீப் வண்டிகள் அவரின் அருகிலேயே முன்னமும் பின்னுமாக வந்து நின்றன… சிறீலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தினுள் சுற்றிவளைத்துவிட்டதை உணர்ந்த திலீபன் எதுவித பதட்டமும் அடையாமல் நிதானமாக நின்றார்… அவரின் மதிநுட்பம் மிகத் தீவிரமாக வேலை செய்யத் தொடங்கியது.

யாரோ ஒரு தமிழ் துரோகியால் பெறப்பட்ட தகவலை வைத்துக்கொண்டு திலீபனை அடையாளம் கண்டுகொண்ட இராணுவத்தினர் ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்திரவிட்டனர். அவனது கையிலே ஆயுதம் அடங்கிய சிறிய சூட்கேஸ் ஒன்று இருந்தது.. அவனருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர். ஜீப் வண்டியில் ஏறும் போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேசினால் மின்னல் வேகத்துடன் தாக்கிவிட்டு, பக்கத்திலிருந்த பனந்தோப்பை நோக்கி ஓடத்தொடங்கினார். திலீபன். திலீபனின் எதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்துவிட்ட இராணுவத்தினர். ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர்.

மறுகணம் அவர்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக திலீபனை
நோக்கி உறுமத்தொடங்கின. அவரது கையொன்றைக் துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு இரத்தம் சிந்தத் சிந்த மனதை திடமாக்கி கொண்டு வெகுநேரமாக ஓடிக்கொண்டிருந்தார் திலீபன்.

இராணுவத்தினரால் அவரைப் பிடிக்க முடியவில்லை அந்த ஏமாற்றத்தினால் பல பொது மக்க அவர்கள் அன்று கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளிவிட்டுச் சென்றனர். 1986-ஆம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புலிகள் – சிறீலங்கா இராணுவத்தினர் மோதலின்போது திலீபன் தன் துப்பாக்கியால் பலரைச் சுட்டுத் தள்ளினான். ஆனால், எதிரிகளின் ஓர் குண்டு அவனின் குடலைச் சிதைத்து விட்டது. யாழ் பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டபோது அவரின் குடலில் 14 அங்குலங்களை சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். அதில் அவர் பெருமளவில் இரத்தத்தை இழந்திருந்தார். அந்த காயம் மிகவும் சிக்கலாக இருந்ததால் மேலும் இரண்டு அறுவை சிகிச்சை செய்த பின்னரே அவர் பூரண குணமடைந்தார். சுமார் 3 மாதம் வைத்தியசாலையிலே கழிய வேண்டியதாயிற்று இப்படி எத்தனையோ துன்பங்களை தமிழினத்துக்காக அனுபவித்தவர்தான் திலீபன்.

ஆயுதப்போரட்டத்தினால் மாத்திரமின்றி, அகிம்சையாலும் தன்னால் சாதனைகள் புரிய முடியும் என்பதில் திலீபனுக்கு அசையாத நம்பிக்கை இருந்ததால் அவர் இந்தப் போராட்டத்தில் தானாகவே முன்வந்து எத்தனையோ பேர் தடுத்தும் கேட்காமல் குதித்தார். இன்று மாலை இந்திய சமாதனப் படையினரின் யாழ்கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் பரார் அவர்கள், திலீபனை பார்க்க வந்தார், அவர் சனக்கூட்டத்தினூடாக நடந்து வரும் போது பல தாய்மார்கள் அவர் மீது கற்களை வீசிய தயாராகிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தடுத்து தகுந்த பாதுகாப்புக் கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச் சென்றனர் விடுதலைப் புலிகள், திலீபனின் உடல் நிலை மோசமாகி வருவதால் பொதுமக்களும், இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் யோகியும், வேறு சிலரும் அவரிடம் எடுத்துக் கூறினர். தான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் உறுதி கூறிவிட்டுச் சென்றார். அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்ற நப்பாசையில் அன்று எம்மிற் சிலர் சற்று நிம்மதியாக இருந்தோம்

Leave a Reply