கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்!

அமைதியாகப் போராடிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறை செய்திருக்கிறது. நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது காவல்துறை ஏவியுள்ள அராஜகத்தினை மே பதினேழு இயக்க வன்மையாக கண்டிக்கிறது.
– மே பதினேழு இயக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் ஏ.டி காலனி பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அந்த குடியிருப்பின் அருகில் துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் வீடு இருக்கிறது. பக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்பு இருப்பதால், அவர்களுக்கான தொடர்பை துண்டிப்பதற்காக 20 அடி உயரத்திற்கு ஒரு சுவர் எழுப்பி வைக்கப்பட்டிருந்திருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு தீண்டாமை சுவரைப் போன்றே இந்த சுவர் எழுப்பப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், உரிய பாதுகாப்பான முறையில் தரமாக கட்டப்படாத அந்த கருங்கல் சுவர் இடிந்து விழுந்து சுவரின் அருகிலிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளின் மீது விழுந்து, வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த சுவரில் விரிசல்கள் இருப்பது குறித்து தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் பலமுறை உரிமையாளரிடம் பேசியும், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறை நடத்தியிருக்கிறது. தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களை கடுமையாக தாக்கி கைது செய்திருக்கிறார்கள்.

17 பேர் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் போராடுபவர்களை காவல்துறை ஒடுக்குகிறதென்றால் இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது? தோழர் நாகை திருவள்ளுவன் மற்றும் போராடிய மக்களை தாக்குவதற்கு உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

உயிரிழந்த மக்களின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தீண்டாமைச் சுவரைப் போன்ற சுவரை எழுப்பியிருந்த துணிக்கடை உரிமையாளரை கைது செய்து, இறந்த மக்களுக்கு நட்ட ஈட்டினையும் அந்த நபரிடம் பெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளுனான தொடர்பை துண்டிப்பதற்காக எழுப்பப்பட்டுள்ள அனைத்து தீண்டாமை சுவர்களும் இடித்துத் தள்ளப்பட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply