தமிழகத்தின் இன்றய அவசர தேவை குறித்து சென்னையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழகத்தின் இன்றய அவசர தேவை குறித்து 29-10-19 அன்று மாலை 3:30க்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, லெனா குமார், பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில், கியார் புயல் நடுவே சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி வலியுறுத்தப்பட்டது. மேலும், குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை குறித்தும், மருத்துவர்களின் போராட்டம் குறித்தும் பேசப்பட்டது.

கியார் புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க விடுக்கப்பட்ட அறிக்கை:

‘கியார்’ புயலால் கரை திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுக்கு மே பதினேழு இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்துறை, மார்த்தாண்டம்துறை, வள்ளவிளை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகளுடன் கடந்த ஒரு வாரம் முன்பு மீன்பிடிக்கச் சென்றனர். அரபிக்கடலில் கியார் புயலால் பாதிப்புக்குள்ளான மீனவர்கள், துறைமுகங்களுக்கு அருகில் கரை ஒதுங்கியதாக தங்கள் குடும்பங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் புயல் வந்து மூன்று நாட்களாகியும்

வள்ளவிளை – 5 படகுகள்,
தூத்தூர் – 6 படகுகள்
சின்னதுறை – 1 படகு,
மார்த்தாண்டம்துறை – 1 படகு,
இரவிபுத்தந்துறை – 1 படகு

மற்றும் அதில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. கடலோர காவல்படையும் இவர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கொடுக்கவில்லை.

ஏற்கனவே ஒகி புயலால் பாதிக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட மீனவர்களை இழந்த இந்த கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களே மீண்டும் காணாமல் போயுள்ளனர். மீனவர்களுக்கு போதுமான அளவு சேட்டிலைட் போன்கள் வழங்கப்படவில்லை. மேலும் புயல் வந்ததாக சொல்லப்பட்டு 4 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கடலோர காவல்படை இன்னும் மீனவர்களை தேடிச் செல்லவில்லை. இதிலிருந்து கடந்த புயல் பாதிப்பிலிருந்து அரசு எந்தவிதமான பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதாகவே பார்க்க முடிகிறது.

அரசு பின்வரும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுக்க வேண்டும்.

1. அரசு உடனடியாக இதில் தலையிட்டு கடலில் தத்தளிக்கும் மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்
2. குஜராத் கோவா போன்ற பகுதிகளில் கரை ஒதுங்கி இருக்கும் மீனவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
3. மாதக்கணக்கில் மீன் பிடிக்க சென்றவர்கள் ஓமன் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றிருக்க வாய்ப்பு இருப்பதால் அரசு அந்த நாடுகளின் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு உடனடியாக அங்கு மீனவர்கள் கரை ஒதுங்குவவதற்கு உதவி செய்ய வேண்டும்
4. கடலுக்குள் செல்லும் அனைத்து மீனவர்களுக்கும் சேட்டிலைட் போன் கொடுக்கப்பட வேண்டும்

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply