தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழர்களே! சென்னையை நோக்கி திரண்டு வாருங்கள்! – மே பதினேழு இயக்கம் அழைக்கிறது!

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு வரும் ஜூன் 9 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டை கடந்திருக்கிறோம். ஆனால் இனப்படுகொலைக்கான நீதி என்பது தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

காலப்போக்கிலான பல்வேறு நிகழ்வுகளினூடாக இனப்படுகொலை மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்காலத்தில் நம் தமிழர்களுக்கு நடந்திருக்கிற இந்த இனப்படுகொலை என்பது மிகவும் கொடூரமானது. இந்த இனப்படுகொலையை நாம் மறப்பதென்பது மேலும் பல படுகொலைகளை செய்யக் கூடிய பெரும் பலத்தினை கொலையாளிகளுக்கும், வல்லரசுகளுக்கும் கொடுக்கும்.

இந்த இனப்படுகொலையை இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மறக்கமாட்டோம் என்பதை நாம் சொல்லவேண்டியிருக்கிறது. நினைவேந்துவது நம் பண்பாட்டு மரபு. நினைவேந்தலை தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைப்பட்ட நிகழ்வாக மாற்ற வேண்டும்.
இதில் நாம் பல்லாயிரக்கணக்கில் குடும்பம் குடும்பமாய் திரண்டு நிற்க வேண்டும்.
உலகில் எந்த இனமும் தமக்கு நிகழ்ந்த பேரவலத்தினை 10 ஆண்டுகளில் சாதாரணமாக கடந்ததில்லை. நாம் இனப்படுகொலையை மறக்கப்போவதில்லை என்பதை உலக சமூகத்திற்கு உரக்க சொல்லப்போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நாம் கூடிக் கொண்டே இருப்போம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் கடலில் நினைவேந்தலை நடத்த தமிழக அரசு மறுத்து வருகிறது. மறுப்புகளைத் தாண்டி நம் உரிமையைக் கோர வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. தமிழர் கடலின் முன்பே உள்ள நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலிருந்து நாம் கூடுவோம். இனப்படுகொலையை மறக்க மாட்டோம் என்ற பெருஞ்செய்தியை உலகுக்கு தெரிவிப்போம்.

சாதி, மத வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு தமிழராய் குடும்பத்தோடு வாருங்கள்! இது உங்கள் வீட்டு நிகழ்வு! இது நம் சமூகத்து நிகழ்வு! ஜூன் 9 மாலை 4 மணிக்கு சேப்பாக்கம் கலைவாணர் அரங்கின் முன்பு கூடுவோம்.

நாம் வெல்வோம்!

நாள் : 9 ஜூன் 2019 ஞாயிறு, மாலை 4 மணி

இடம்: தமிழர் கடல் (மெரினா),  சென்னை

அனைவரும் குடும்பத்துடன் ஒன்றுகூடுவோம்

Leave a Reply