தோழர் திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் அறிக்கை

தோழர் திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

“தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில் தமிழக காவல்துறையினர் நடத்திய 13 பேர் படுகொலையை, ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் அண்மையில் திருமுருகன் காந்தி பதிவு செய்தார். அதில் எந்தத் தவறும் கிடையாது. உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இப்படி நடைபெறுகிற படுகொலைகள் மனித உரிமைக் கவுன்சிலில் பதிவு செய்யப்படுகின்றன.

ஆனால் திருமுருகன் காந்தியை எவ்விதத்திலாவது நிரந்தரமாக முடக்கிவிட வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டு, காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்வதும், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருமுருகன் காந்தியின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினாலும், கவலையினாலும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமாரக்டிக் கட்சி, தமிழ் அமைப்புக்கள் அனைவரோடும் இணைந்து மதிமுக மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தியது.

பாசிச வெறியாட்டம் போடும் மத்திய அரசும், அதற்குக் குற்றேவல் செய்யும் தமிழக அரசும் திருமுருகன் காந்தியின் குரலை ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளன. அதன் விளைவாகத்தான் கர்நாடக காவல்துறையைப் பயன்படுத்தி பெங்களூரில் கைது செய்துள்ளனர். இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்”

திரு.வைகோ அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply