அமெரிக்க தூதரக முற்றுகை அழைப்பு

- in பரப்புரை
மார்ச் 14 சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தினை முற்றுகை இடுகிறோம்.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தனது பகடைக்காயாக பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை தனக்கு சாதகமானதாக மாற்றியது அமெரிக்கா. அதன் பின்னர் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை மீதான அறிக்கையை சமர்ப்பிக்க தேவையில்லை, சற்று கால அவகாசம் கொடுப்போம் என்று சொல்லி, அறிக்கையை பின்னுக்கு தள்ளியது.
அதன் பின்னர், இலங்கை தனது நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறது, அதனுடனான அமெரிக்காவின் உறவை கெடுத்துக்கொள்ள தேவையில்லை என்று அறிவித்தது. ஆக தமிழரின் பிரச்சனை தனது நலனுக்கானதாக பயன்படுத்திக்கொண்டு செயல்படும் எந்த ஒரு அரசையும் எதிர்க்கும் அரசியலை நாம் மேற்கொள்ளுவோம்.
1. இலங்கையில் இனப்படுகொலைக்கான விசாரனை நடத்த வேண்டிய அவசியத்தை மறைக்காதே. தீர்மானத்தினை திருத்து.
2. தமிழர்கள் ‘மதச் சிறுபான்மையினர்’ என்பதாக வரையறை செய்வதை மாற்று , இனப்படுகொலை , தமிழ்த்தேசிய இனமக்கள் மீது நிகழ்ந்தது என்பதை மறைக்காதே
3. ஐ.நாவின் சாசனம் 1.2இன் சர்வதேச விதிமுறைப்படி தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பினை நடத்துவதை தடுக்காதே.
4. ஐ,நாவின் விதிப்படி நடக்க வேண்டிய சர்வதேச சுதந்திர விசாரணையை தடுத்து நிறுத்தாதே.
5. இனப்படுகொலை நிகழ்ந்ததற்கு அமெரிக்கா, இங்கிலாந்து – மேற்குலகம், இந்தியா போன்ற நாடுகளே காரணம். அமைதி பேச்சு வார்த்தை முறிவிற்கும் இவர்களே பொறுப்பு. இதனாலேயே இனப்படுகொலை நிகழந்தது. இவர்களே கூட்டு குற்றவாளிகள்.
6. இனப்படுகொலைக்கான விசாரணையில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா , ஐ.நா அதிகாரிகள் உள்ளிட்டவர்களை விசாரணை செய்வதே தமிழர்களின் கோரிக்கை. இதை மறைக்காதே, திரிக்காதே….
7. தமிழர் கடலை விட்டு வெளியேறு
என விரிந்து செல்லும் கோரிக்கையை மய்யப்படுத்தி முற்றுகை இடுவோம்.
அமெரிக்காவினை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏன் இருக்கிறது.
1. தமிழர்கள் மீதான இனப்படுகொலை போரினை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போராக’ வரையறை செய்து கொண்டிருக்கிறது.
2. தமிழர்கள் தேசிய இன மக்கள் என்பதை மறைக்கவும், திரிக்கவும் இலங்கை அரசு மதச் சிறுபான்மையினர் மீதே மனித உரிமை மீறலை செய்தனர் என்பதாக வரையறையை செய்கிறது.
3. இவ்வாறு மத சிறுபான்மையினர் என்று பேசுவதால் தேசிய இன வரையறைக்குள் தமிழர்கள் கொண்டு வரப்படாமல் போகப்படும்.
ஐ.நாவின் சாசனத்தின் முதல் விதியின் இரண்டாவது பிரிவு தெளிவாக தேசிய இனவிடுதலையை ஆதரிக்கிறது. இதனை தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள இயலாதவாரு மேற்குலகம் இதைச் செய்கிறது.
4. ஆட்சி மாற்றத்தினை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமெரிக்கா செயல்படுவதை அதன் அறிக்கைகளும் நடவடிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. இலங்கை அரசு பாராட்டத்தக்க நடவெடிக்கைகளை எடுப்பதாக அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
5. தென் ஆப்பிரிக்காவினைப் போல நல்லிணக்கமே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு என்கிறது. இதன்படி தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறந்து சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மேற்குலகம் முன்வைக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் அதிகாரம் கருப்பின மக்களுக்கு மாறிய பின்னர் வெள்ளையர்களை மன்னிக்கும் அதிகாரத்தினை பெற்றார்கள்.இதன் மூலமாகவே நல்லிணக்கம் அங்கே அமுலாக்கப்பட்டது. அதுவும் கூட தோல்வி என்றே வரையறை செய்யப்படுகிறது. தமிழர்களுக்கு எள்ளளவு அதிகாரமற்ற இலங்கையில் எவ்வாறு நல்லிணக்கம் செய்ய முடியும். இது பச்சை அயோக்கியத்தனம். இதன் மூலம் ஈழ கோரிக்கை சமரசம் செய்து கொண்டு ஒன்று பட்ட இலங்கைக்குள் வாழுங்கள் என்கிறது மேற்குலகமும், இந்தியாவும்.
6. உண்மையில் நிகழ்ந்திருக்க வேண்டிய சர்வதேச சுதந்திர விசாரணையை மேற்குலகம் தடுத்து வைத்திருக்கிறது. தமிழர்களின் நிலப்பரப்பினையும், கடற்கரையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல விரும்பும் மேற்குலகினை அம்பலமாக்குவது நமது கடமை.
7. 2000 லிருந்து 2009 வரை இங்கிலாந்து அரசானது, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக அளவு ஆயுதத்தினை இலங்கைக்கு விற்பனை செய்தது. இதே காலகட்டத்தில் அமெரிக்கா விடுதலைப் புலிகளின் ஆயுத கொள்முதலையும், நிதி வரத்தினையும் முடக்கியது.
இது போன்று எண்ணற்ற காரணங்களை கணக்கில் எடுத்துக்கொண்டே இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. பெரும் திரளாக தமிழர்கள் பங்கேற்க அழைக்கிறோம்.
பல கட்டுபாடுகளுக்கும், கண்காணிப்புகளுக்கும் இடையே ஆயிரக்கணக்கில் ஈழத் தமிழர்கள் திரண்டு யாழில் போராட்டம் நிகழ்த்தி இருக்கிறார்கள். தமிழகத்தினை விட குறைவான மக்கள் தொகை கொண்ட ஈழ மக்களே பெரும்திரளாய் போராட்ட களத்தில் நிற்கும் பொழுது , தமிழகத்தில் பெரும் திரளாய் திரளுவதே போராட்டத்தினை வலுப்படுத்தும்.
போராட்ட களத்திற்கு அழைக்கிறோம்… தமிழகமே கைகோர்த்து நில்….
2009 இனப்படுகொலைக்கு நீதி கேட்டே நாங்கள் வீதிக்கு வந்தோம். அதில் ஒரு பொழுதும் சமரசம் கிடையாது. ஈழ விடுதலை அடையும் வரை தமிழகத்தமிழர்கள் ஓயப்போவதில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்

Leave a Reply