கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்து இன்றளவும் மர்மம் விலகாத நிலையில் அது குறித்து பத்திரிகையாளர்கள் என்ற முறையில் பல்வேறு பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு கொண்டு வருகிறது.
அந்த வகையில் நக்கீரன் புலனாய்வு இதழும் தங்களது பத்திரிக்கையின் சார்பாக செய்திகள் வெளியிடுவதற்காக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோரை களத்திற்கே அனுப்பிவைத்து பல்வேறு தகவல்களை அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் நேற்று சர்ச்சைக்குரிய பள்ளி மீண்டும் புனரமைக்கப்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோர் மீது பள்ளி உரிமையாளரின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் ‘செய்தியா போடுகிற உன்னை என்ன செய்கிறோம் பார்’ என்று அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை சொல்லி திட்டியும், கொடூரமாக தாக்கியும் உள்ளனர்.
பத்திரிக்கையாளர்களை தாக்கும் இந்த போக்கு மிக ஆபத்தானது. இதன் பின்னணியில் பள்ளியை நிர்வகிக்கும் இந்துத்துவ கும்பல் இருப்பதாக தெரிகிறது. உண்மை தான் பக்கம் இருக்கிறது என்றால் ஏன் பத்திரிகையாளர்களை தாக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாக பொதுமக்கள் மத்தியில் எழத்தான் செய்யும். இது போன்ற தாக்குதல்கள் தமிழகத்தில் இனியும் தொடராமல் இருக்க தமிழக அரசு இதை இரும்புக்கரங்கொண்டு அடக்க வேண்டும்.
இந்துத்துவ சக்திகள் மீதான, குறிப்பாக கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் மீதான காவல்துறையினரின், திமுக அரசின் மென்மையான போக்கு இன்று பத்திரிக்கையாளர்களை தாக்கும் சூழலுக்கு வழிவகுத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடராது இருக்க, பத்திரிக்கையாளர்களை தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு மீண்டும் முடக்கம்! சமூகவலைத்தளங்களில் சுருக்கப்படும் மே 17 இயக்கத்தின் ஜனநாயக வெளி! – மே பதினேழு இயக்கம்
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி கொண்டிருக்கும், சுமார் 1.7 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்ட டிவிட்டர் கணக்கு, ஒன்றிய பாஜக அரசின் உத்தரவின் பேரில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்திய பயனாளர்களின் பார்வைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது இதனையடுத்து மாற்று பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட புதிய டிவிட்டர் கணக்கையும் டிவிட்டர் நிறுவனம் தற்போது முடக்கியுள்ளது. கருத்துரிமையை மறுக்கும் டிவிட்டர் நிறுவனத்தின் ஜனநாயக விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை, திட்டங்களை அம்பலப்படுத்தும் விதமாக தோழர் திருமுருகன் காந்தி தனது டிவிட்டர் கணக்கில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். அமைச்சர்கள் உட்பட பலரை தனது கேள்விகள், விமர்சனங்கள் மூலம் நெருக்கடிக்குள்ளாக்கினார். இதனால் பாசிச பாஜக அரசு தோழர் திருமுகன் காந்தியின் பதிவுகளை இந்திய பயனாளர்கள் பார்வையிடுதை தடுக்க டிவிட்டர் நிறுவனத்திற்கு உத்தவிட்டது. தோழர் திருமுருகன் காந்தி மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் பல செயற்பாட்டாளர்களின் கணக்கு இவ்வாறு முடக்கப்பட்டது. புதிய கணக்கின் மூலம் மாற்று வழியில் மக்களை அடைவதை தடுக்கும் நோக்கில் தற்போது தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் புதிய கணக்கையும் முடக்கியுள்ளது.
மே பதினேழு இயக்கம் இத்தகைய அடக்குமுறையை நீண்டகாலமாகவே சந்தித்து வருகிறது. மே பதினேழு இயக்கத்தின் முகநூல் கணக்கு சில ஆண்டுகளாக இவ்வாறு முடக்கப்பட்டிருந்தது. யூடியூப் தளம் முழுமையாக முடக்கப்பட்டு பல்லாண்டுகால காணொளி தரவுகளை இழந்தோம். தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம், முகநூல் கணக்கு உள்ளிட்டவை தகுந்த காரணங்களின்றி நீக்கப்பட்டது. மே பதினேழு இயக்கத் தோழர்களின் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது டிவிட்டர் தளத்தில் அந்த அடக்குமுறை நிகழ்ந்து வருகிறது.
சமூக வெளியில் கருத்துக்களை தெரிவிப்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதிகார வெறியில் பாசிசத்தை புகுத்த முயலும் பாஜக அரசு, அத்தகைய பேச்சுரிமையை, கருத்துரிமையை மறுக்கும் செயலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தகுந்த காரணங்கள் அளிக்காமல் பல முக்கிய நபர்களின் கணக்குகளை முடக்க ஒன்றிய பாஜக அரசு தொடர்ச்சியாக கோரி வருவதற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீதிமன்றம் சென்றுள்ளது. இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக செயல்படுவது அம்பலமாகியுள்ளது. ஆயினும் ஒன்றிய பாஜக அரசு அப்போக்கை நிறுத்திவிடவில்லை என்பதை தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் டிவிட்டர் கணக்கு முடக்கம் காட்டுகிறது.
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் சமூக வலைத்தள செயல்பாடுகளை முடக்கினால் மே பதினேழு இயக்கத்தின் கருத்துக்கள் மக்களை சென்றடைவதை தடுத்துவிடலாம் என்று ஒன்றிய அரசு எண்ணுகிறது. ஜனநாயக வெளியை சுருக்கும் ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் மே பதினேழு இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது என்பதை உறுதிபட கூறுகிறோம். அடக்குமுறைகள் அதிகரித்தால் அதே வீரியத்துடன் மீண்டெழுவோம். ஒன்றிய பாஜக இத்தகைய ஜனநாயக விரோத செயல்களை உடனடியாக நிறுத்துமாறு மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
ஒன்றிய பாஜக அரசினால் தனது சமூகவலைத்தள பக்கங்கள் ஜனநாயகவிரோதமாக முடக்கப்பட்டுள்ளதன் பின்னணி குறித்தும், அதிமுக கட்சியில் நிலவும் தலைமைக்கான போட்டி குறித்தும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ரெட்பிக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.
யூடியூப் இணைப்பு:
மே பதினேழு இயக்கம்
9884864010
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம் முடக்கம்! சனநாயக வெளியை முடக்கும் முகநூல் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம் (fb.com/thirumurugan.gandhi.may17) நேற்று (11-01-22) முடக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஏதும் அறிய முடியவில்லை. முகநூல் நிர்வாகம் இது தொடர்பான எந்த ஒரு எச்சரிக்கையோ அறிவிப்போ வழங்கவில்லை. தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கத்தை முடக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்துள்ளது. முகநூல் நிர்வாகத்தின் இத்தகைய சனநாயகமற்ற செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தனிப்பட்ட முகநூல் கணக்கு துவங்குவதற்கு முகநூல் நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. திருமுருகன் காந்தி என்ற பெயரில் கணக்கு துவங்கினால் அடுத்த நொடியே அந்த கணக்கு முகநூல் நிர்வாகத்தால் முடக்கப்படுகிறது. அதே போல், ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் அவர்களின் பெயரில் துவங்கப்பட்ட தனிப்பட்ட கணக்கும் தடுக்கப்பட்டு, தகுந்த அடையாளச் சான்றுகள் அளித்தும் கணக்கை அணுகுவதற்கு எவ்வித காரணமுமின்றி முகநூல் நிர்வாகம் மறுக்கிறது.
மேலும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் சிலரது நீண்டகால கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது அல்லது அதன் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மே பதினேழு இயக்கம் மற்றும் தோழர் திருமுருகன் காந்தியின் முகநூல் பக்கங்களின் பதிவுகள் அப்பக்கங்களை பின்தொடர்பவர்களை சென்றடையாமல் மட்டுப்படுத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் கடந்த காலங்களில் முடக்கப்பட்டுள்ளது. இதில், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கமானது தகுந்த சான்றுகள் அளிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட (Blue Tick) பக்கமாகும்.
இவை அனைத்திலும், முகநூல் நிர்வாகம் முறையான எச்சரிக்கையோ அறிவிப்போ வழங்கவில்லை. மேலும் இது குறித்து முறையிடுவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்தும் வைத்துள்ளது. இது, மே பதினேழு இயக்கத்தின் செயல்பாட்டை முழுவதுமாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே முகநூல் நிர்வாகம் செயல்படுவதை காட்டுகிறது. அதன் உச்சம் தான் தற்போது தோழர் திருமுருகன் காந்தியின் முகநூல் பக்கம் முடக்கம்.
முகநூல் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் மே பதினேழு இயக்கத்தின் மீதான அடக்குமுறை தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கான சந்ததாரர்களை கொண்டிருந்த மே பதினேழு இயக்கத்தின் யூடியூப் சானலும் எச்சரிக்கை அளிக்காமல் முடக்கப்பட்டது. இதனால் பல்லாண்டு ஆவணங்களான காணொலிகளை இழந்தோம். இது குறித்து மே பதினேழு இயக்கம் மக்கள் மன்றத்தில் பல முறை முறையிட்டுள்ளது.
மே பதினேழு இயக்கம் சமூக வலைத்தளங்களில் செயல்படுவதற்கான சனநாயக வெளியை முடக்குவது கருத்துரிமைக்கு எதிரானதாகும். தோழர் திருமுருகன் காந்தியின் முகநூல் பக்கம் மீண்டும் செயல்பட முகநூல் அனுமதிக்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை சனநாயக ஆற்றல்கள் உண்டாக்க வேண்டுமென வேண்டுகோள் வைக்கின்றோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010 / contact.may17@gmail.com
பத்திரிக்கை சுதந்திரத்தை வேட்டையாடும் மோடி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) அமைப்பின் சார்பாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகின் ‘180 நாடுகளில் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம்’ பற்றியான பட்டியலில், இந்த ஆண்டு இந்திய ஒன்றியம் 142-வது இடத்தை பிடித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் என்று ஒரு பட்டியலை இதே RSF அமைப்பு வெளியிடுகிறது. அதில் நரேந்திர மோடி, அவர் பிரதமராக பதவி ஏற்றது முதல் இடம்பெற்று வருகிறார்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
கருத்து சுதந்திரத்தை முடக்கும் மோடி அரசின் புதிய ஐ.டி. விதிமுறைகள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு பயனர்களின் தரவுகளும் கண்காணிக்கப்படும். அரசு விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கருத்துக்களையும் 36 மணி நேரத்துக்குள் நீக்கவேண்டும் என்றும் இந்த விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .. பயனர்களின் கணக்குகளை லாபத்துக்காக கண்காணிப்பதாக குற்றம் சாட்டப்படும் பெருநிறுவனங்களே, இந்திய அரசின் புதிய ‘கண்காணிப்பு’ சட்டங்களைப் பற்றி ‘கவலை’ கொண்டுள்ளனர். .. சமூக ஊடகங்களின் வலிமையை உணர்ந்த மோடி அரசு அந்த ஆயுதம் வேறு யார் கையிலும் கிடைக்காமல் இருக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துவருகிறது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு (twitter.com/@thiruja) முடக்கப்பட்டுள்ளது.
மே பதினேழு இயக்கம் தொடர்பான சமூக வலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டு வரும் சூழலில், மே 17 இயக்கத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் (fb.com/mayseventeenmovement) மட்டுப்படுத்தப்பட்டு, அதில் பதிவிடப்படும் பதிவுகளை அப்பக்கத்தை பின்தொடர்பவர்களுக்கு காட்டப்படுவதில்லை. பல்லாயிரக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்த மே 17 இயக்கத்தின் யூட்யூப் சேனல் நீக்கப்பட்டு, பல முக்கிய காணொளிகளை இழந்துள்ளோம். மே 17 இயக்கத்தின் பல முக்கிய தோழர்களின் கணக்குகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டும், மட்டுப்படுத்தபட்டும் வருகின்றன.
அதே போல், தோழர் திருமுருகன் காந்தியின் தனிநபர் கணக்கை 3 முறை தடை செய்ததோடு, தற்போது தனக்கான தனிநபர் கணக்கை உருவாக்குவதை கூட முகநூல் தடுத்து வைத்துள்ளது. தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கின் இணைப்பை கூட தடுக்கப்பட்ட (Blocked) இணைப்பு என்று கூறி, டிவிட்டர் கணக்கின் இணைப்பை பகிர்வதையும் முகநூல் தடுத்து வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தோழர் திருமுருகன் காந்தி 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
மே 17 இயக்கத்தை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், மே 17 இயக்கத்தின் கருத்துக்கள் மக்களை சென்றடையக் கூடாது என்ற நோக்கத்தை கொண்டே நடத்தப்படுகிறது. மே 17 இயக்கத்தின் கருத்துக்கள் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை உண்டாக்குகிறது என்பதே இதற்கு காரணம். மே 17 இயக்கம் செயல்படுவதற்கான வெளியை சுருக்குவதன் மூலம், அமைப்பை முடக்கிவிடலாம் என்று பாஜக அரசு தப்புகணக்கு போடுகிறது. இது அப்பட்டமாக கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். ஜனநாயக நாட்டில் கருத்துரிமையை தடுப்பது, நாடு பாசிசத்தின் பிடியில் இருப்பதையே காட்டுகிறது.
இந்திய முகநூல் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி ஆர்எஸ்எஸ்-பாஜக தொடர்புடையவர் என்பதையும், டெல்லி கலவரத்திற்கு முக்கிய காரணமாக முகநூல் இருந்தது என்பதையும் மே 17 இயக்கம் அம்பலப்படுத்தி இருந்தது. பின்னர் அவர் பதவி விலகினாலும், மோடியின் நெருங்கிய நண்பரான அம்பானியின் நிறுவனத்தில் முகநூல் முதலீடு செய்த பின்னர், முகநூல் முழுக்க இந்துத்துவ சார்பான நிலைக்கு சென்றுவிட்டது. அதே போன்ற நெருக்கடி, தற்போது டிவிட்டர் நிர்வாகத்திற்கும் ஏற்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து சில ஹேஷ்டேக்களையும், கிட்டத்தட்ட 1200 கணக்குகளையும் முடக்க பாஜக அரசு சார்பாக சில நாட்கள் முன்னர் வலியுறுத்தப்பட்டது. டிவிட்டர் நிர்வாகம் அதற்கு இணங்காத நிலையில், டிவிட்டர் சமூகத்தளம் இந்தியாவில் தடை செய்யப்படும் என்றளவில் மிரட்டப்பட்டது. அதன் விளைவே, பாஜக அரசிற்கு எதிராக கருத்துக்களை கூறும் நபர்களின் கணக்குகளை முடக்க டிவிட்டர் முனைந்துள்ளது. அதில் தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கும் இருந்துள்ளது.
பாஜக அரசின் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் மே 17 இயக்கத்தின் செயல்பாட்டை என்றுமே முடக்கப்போவாதில்லை. மக்களை சென்றடைவதற்கான அனைத்து வழிமுறைகளையும் மே 17 இயக்கம் மேற்கொண்டு, எமது கருத்துக்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீரியமாக மக்களிடையே கொண்டு செல்லும். பாசிசத்தின் பிடியிலிருந்து சமூக வலைத்தளங்களை விடுவித்து சாமானியனின் கருத்துரிமையை உறுதி செய்ய முற்படும் என்று மே 17 இயக்கம் உறுதியளிக்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884072010