2009-ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை கண்டித்து ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர்நீத்த தழல் ஈகியர் முருகதாசன் அவர்களின் 14-வது நினைவு நாள். முருகதாசன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!
மே பதினேழு இயக்கம்
9884864010
தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதியும், உழைப்பாளர் நாளை முதன் முதலில் முன்னெடுத்தவருமான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 77-வது நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
சனவரி 25 – மொழிப்போர் ஈகியர் நாள்
ஆரிய-பார்ப்பனியத்தின் இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான மொழிப்போரில் தன்னுயிரை ஈந்து தாய்மொழி தமிழை காத்திட்ட மொழிப்போர் ஈகியருக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66-வது நினைவு நாளில் “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்” என்று கூறியதை நினைவில் ஏந்துவோம்!
“கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாக பிறந்துவிட்டேன். அதை தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக்கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன். நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்!”
புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழீழ விடுதலைக்காக போராடி உயிரீகம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூறும் மாவீரர் நாளில் மே பதினேழு இயக்கம் வீர வணக்கம் செலுத்துகிறது – நவம்பர் 27, 2022
“தமிழீழ புலிகள் தாயகம் மீட்டிட
உமிழ்ந்த – உமிழ்கின்ற உயிர்களை வணங்கிடும்
மாவீரர் நாளிது! மாவீரர் நாளிது!
மக்கள் உரிமைகள் மலர்கின்ற நாளிது!”
– பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்.
ஆம், உண்மைதான். 60 ஆண்டுகால சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறை நடந்தேறிய மண்ணில் தமிழீழத் தமிழர்கள் தங்கள் மரபுரிமையான ஈழ மண்ணையும், தங்கள் கல்வி, பொருளாதார உரிமைகளையும் மீட்டெடுத்து சாதி மதமற்ற ஒரு சமூகத்தை பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைத்த காலம் விடுதலைப் புலிகள் போராடிய காலமென்றால், அந்த நம்பிக்கைகளுக்கு உரமாய் விழுந்தவர்கள் அப்போராட்டத்தில் ஈகியர்களான மாவீரர்களே.
தமிழீழ இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2009 மே மாதம் மட்டுமே ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு முன் பல்லாயிரக்காணக்கான மக்கள் தந்தை செல்வா காலம் முதலே சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அடக்கு முறைக்கு பலியாகியுள்ளனர். தமிழர்கள் இழந்த பொருளாதார கணக்கீடுகள் பற்றி முழுமையான தகவல்கள் கூட இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஈழப் போராட்டத்தை கையில் எடுப்பதற்கு முன்னர் பண்டார நாயகா ஆட்சியில் ‘ஒற்றை சிங்கள மொழி சட்டம்’ வந்து போது 10 நாட்கள் நடந்த கல்ஓயா(1956-ம் ஆண்டு) தாக்குதலில் 150 தமிழர்கள் கொல்லப்பட்டது, ‘சிறீ’ என்ற சிங்கள எழுத்தை இலங்கையில் இருக்கும் வாகனங்களில் கட்டாயம் குறிக்க வேண்டும் என்ற சட்டத்தை போட்டபோது சிங்களவர்கள் நடத்திய கலவரத்தில்(1958-ம் ஆண்டு) 1000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டது, 1974 ம் ஆண்டு உலகத் தமிழாராச்சி மாநாட்டில் 9 தமிழர்கள் சிங்கள காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது என ஒரு சில வரலாற்று நிகழ்வுகள் விடுதலைப் புலிகள் இயக்கம் அங்கு உருவாவதற்கான காரணத்தை உணர்த்துகின்றன.
எந்த கணம் வட்டுக்கோட்டை தீர்மானம் ‘சுதந்திர தனி ஈழமே ஒரே தீர்வு’ என்று பறை சாற்றியதோ அந்த கணமே ஆயுத போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது. “எங்கள் ஆயுதம் எது என்பதை எங்கள் எதிரிகளே முடிவு செய்கின்றனர்” என்ற புரட்சியாளர் மாவோ அவர்களின் கூற்றுப்படி ஆயுத போராட்டத்தின் வழியே ‘சுதந்திர சோசலிச தமிழீழ தேசத்தை’ அடைய முற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் வீரச்சாவெய்திய மாவீரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.
முதன்முதலாக 1989-ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மாவீரர் நாள் பிரகடனப் படுத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதல் வீரச்சாவு கண்ட போராளி தோழர் சங்கர் அவர்களின் நினைவு நாளான நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினமாக முன்னெடுப்பது என்று முன்மொழியப்பட்டது. இது 2009-ம் ஆண்டு இறுதிப் போர் வரை தொடந்தது.
ஆம். 2009- ஆண்டு “தமிழீழ மண்ணில் நடந்தேறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துங்கள்” என்று தன்னைத்தானே எரித்து தழல் ஈகியரன தோழர் முத்துக்குமார் அவர்களை தங்கள் போராட்டத்தில் ஈகியராகிய மாவீரராக அறிவித்து விடுதலைப்புலிகள் இயக்கம்.
2006-ம் ஆண்டு ஈழ மண்ணிற்கு கள ஆய்வு செய்ய சுற்று பயணம் மேற்கொண்ட பெரியாரிய பெருந்தொண்டர் ஐயா ஆனைமுத்து அவர்கள் பதிவு செய்திருக்கும் செய்தி படி,ஈழத்தில் இருக்கும் 10 மாவீரகள் துயிலுஞ்சும் இல்லங்களில் மட்டும் 18500 விடுதலைப்புலிகள் பெயர்கள் பொறிக்கப்பட்டு நினைவுக்கூறப்பட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைக்காக போராடிய உன்னத இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம் என்பதை பறைசாற்றும் சான்று இதுவேயாகும்.
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறியபடி,“மாவீரர்களை வணக்கத்துக்குரியவர்களாக கௌரவிப்பது எமது வீர மரபு”. ஆனால் விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் இலங்கை சிங்கள பேரினவாத அரசு மாவீரர் ன நினைவேந்தல் நிகழ்வுகளை கடுமையாக ஒடுக்குகிற காட்சியை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இறந்தவர்களுக்காக கண்ணீர் சிந்த கூட அனுமதிக்காத பாசிச இனவெறி கொண்ட அரசுக்கு மத்தியில்தான் இன்னுமும் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு விதிவிலக்கு விதி விலக்கு இல்லாத அரசு இந்திய ஒன்றிய அரசு.
தமிழீழம் என்பது ஈழத்தமிழர்களின் மரபுரிமை. தமிழீழம் என்பது தமிழர்களின் அரசியல் உரிமை. தமிழீழம் என்பது சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கான சமூக நீதி. தமிழீழம் என்பது தமிழர்களின் தீராத தாகம். அத் தாகத்தை தீர்த்து விட தங்கள் உயிர் நீர் ஊற்றி ஈகியாரான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
“விடுதலை என்பது ஒரு அக்கினி பிரவேசம். நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம். தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தங்கள் உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்”
– தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் (மாவீரர் நாள் உரை 1994)
“தமிழரின் தாகம், தமிழீழத்தாயகம்”
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழக மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை காத்திட உலக மீனவர் தினத்தில் உறுதியேற்போம்! – மே பதினேழு இயக்கம்
ஆண்டுதோறும் நவம்பர் 21-ஆம் தேதி உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகின் பரந்து விரிந்த கடற்கரையை கொண்டுள்ள நாடுகள் அனைத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய வணிகமாகவும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் மீனவர்களின் பங்கு முக்கியமானதாகவும் உள்ளது. இதனை பறைசாற்றுவதற்கு இந்த நாள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
உலகமயமாக்கல் தீவிரமடைந்த 90-களில் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக கடலும், மீன்பிடி தொழிலும் செல்ல, பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்படைந்தது. இதனை எதிர்த்தும், மீனவர்களின் உலகளாவிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விதமாக, 40 நாடுகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் நவம்பர் 21, 1997-இல் டில்லியில் ஒன்றுகூடி உலக மீன்பிடித் தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த நாளே உலக மீனவர்கள் தினமாக உலகம் முழுவதும் மீனவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அதே வேளை, இந்நாளுக்கான ஐநாவின் அங்கீகாரத்தை பெற மீனவர்கள் இன்றளவும் போராடி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரியது.
மற்றொரு புறம், உலக மீனவர்கள் தினமானது மீன்வள தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இலாபத்தை அள்ளிகொடுக்கும் மீன்களின் வளத்தை கொண்டாடும் தினமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி தொழிலை அழித்து, கடல் மற்றும் கடற்சார் பகுதியிலிருந்து மீனவர்களை வெளியேற்றி, கடல்வளத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையளிக்கும் திட்டத்தை உலக வர்த்தகக் கழகம் (WTO) முன்மொழிவதை 2017-ம் ஆண்டிலேயே மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தி, தொடர்ந்து இன்றுவரை அதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
உலக வர்த்தக கழக்கத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவின் பாஜக அரசு, அதனை நடைமுறைப்படுத்தும் விதமாகவே இயற்கை பேரழிவில் அதிகம் பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. ஒக்கி புயலின் போது கன்னியாகுமரி மீனவர்களை காக்க ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுக்காதது மீனவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியது. அப்போது, குளச்சல் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் நேரடியாக மக்களுடன் பங்கேற்று அரசின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தியது.
தொடர்ந்து நடைபெற்ற Oceans Forum மாநாட்டில் WTO ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டு, அதீத மீன்பிடித்தலை குறைத்து, முறையற்ற மீன்பிடித்தலை தடுத்து கடல்வளத்தை காப்பது என்ற குறிக்கோளை முன்வைத்தது. அதாவது, கடலில் மீன்வளம் குறைவதற்கு மீன்பிடித்தலே காரணம் என்றும், இதை பெரும்பாலும் பாரம்பரிய மற்றும் சிறு-குறு மீனவர்களே செய்கிறார்கள் என்றும், இவர்களை மீன்பிடித்தலில் இருந்து நீக்குவதன் மூலமாக கடலை காப்பாற்றமுடியுமென கூறின. இதனடிப்படையிலேயே தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டத்தை கடந்தாண்டு மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்தது.
மீனவர் அமைப்புக்களோடு கலந்து ஆலோசிக்காமல் இம்மசோதாவினை நிறைவேற்றிய பாஜகவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள், கடல் வளம் இல்லாத வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் என பெரும்பாலான மீனவர்கள் வாழும் நீண்ட கடற்கரை மாநிலங்களில், சொல்லுமளவிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிராத பாஜக கட்சியினால் இம்மசோதா கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் மீன் மற்றும் மீன் பொருட்கள் பங்கு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. 2019-20-ஆம் ஆண்டில் சுமார் 12.90 லட்சம் டன்கள் மீன் மற்றும் மீன் பொருட்களின் ஏற்றுமதி மூலம் ரூ.46,662.85 கோடி மதிப்பில் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 10%, வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 20 விழுக்காடும் ஆகும். அதேபோல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஆகும்.ஆனால் இது வரை ஒன்றிய அரசில் மீனவர் நலனிற்காக தனி அமைச்சரவை இல்லை. மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைத்திட வேண்டுமென தொடர்ந்து மீனவர்கள் போராடி வருகின்றனர்.
அதேபோல் மீன்பிடி தொழில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1.10 லட்சம் டன் கடல் பொருள் ஏற்றுமதி மூலம் 2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சுமார் ரூ. 5,565.46 கோடிக்கு அந்நியச் செலாவணி ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 7.23 இலட்சம் டன். இம்மீன் உற்பத்தி 10.48 இலட்சம் கடல் சார் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக உள்ளது. ஆனால், இதனை மீனவர்களிடமிருந்து பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.
மீனவர்களை மீன்பிடித் தொழிலை விட்டு அப்புறப்படுத்தும் விதமாகவே தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கினாலும், கொலை செய்தாலும், படகுகளை சேதப்படுத்தினாலும், கைது செய்தாலும் இந்தியா ஒன்றிய அரசு அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. கடந்தாண்டு புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினத்தின் மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்டதற்கு பிறகு மே பதினேழு இயக்கம் போராடி மறு உடற்கூராய்வு மேற்கொள்ள வைத்தது. இதன்பிறகு இலங்கையின் தாக்குதல் குறைந்த நிலையில், கடந்த மாதம் இந்திய கடற்படையினரே தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இவ்வாறு மீனவர்களின் துயரம் சொல்லிமாளாது. மீனவர்கள் கடல்சார் பழங்குடிகள். அவர்களை பிற பழங்குடிகளை போல் அங்கீகரித்து, அவர்களது வாழ்விடத்தையும், வாழ்வாதாராத்தையும் வெளிப்புற சக்திகளிடமிருந்து காக்க அரசு முன்வர வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டியது அரசின் கடமை. இதற்கு மீனவர் சமுதாயத்தை பழங்குடி சமூகமென அரசு அறிவிக்க வேண்டும்.
பாரம்பரிய மீன்பிடித் தொழில் காக்கப்படுவதன் மூலமே மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மீன்பிடித்து வரும் பாரம்பரிய பகுதியில் தொடர்ந்து மீன்பிடிப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும். மேலும், சிறுகுறு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். மீனவ சமுதாயம் பயன்பெறும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மீன்வளம் குறித்த உயர் படிப்புகளையும் உருவாக்கிட வேண்டும். மீனவ கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்திட வழிவகை செய்திட வேண்டும்.
மீனவர் விரோத மீன்வள மசோதாவை மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். WTO ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதே மக்களுக்கு அனைத்து வகையிலும் நன்மைபயக்கக் கூடியதாக இருக்கும். தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காத்திட தமிழர்கள் அனைவரும் இந்த நாளிள் உறுதியேற்போம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
மருது பாண்டியர்கள் ஆட்சி மக்களுக்கானதாக இருந்தது. மருது பாண்டியர்கள் மன்னர் பரம்பரையினரல்ல; எளிய மக்கள் பரம்பரையை சேர்ந்தவர்கள். மக்களின் நிலையை நேரடியாகக் கண்டுணர்ந்து மக்களுக்கான ஆட்சியை நடத்தியவர்கள். மக்களாட்சி முறையை ஆதரித்தவர்கள். அவர்கள் ஆட்சியில் நீர் மேலாண்மை, நெல் மேலாண்மை, சமுக மற்றும் சமய நல்லிணக்கம், நட்பு வளர்த்தல், நாடுகாத்தல் போன்றவை சிறந்து விளங்கியது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய வழிபாட்டுத் தலங்களை கட்டியும் திருப்பணிகளையும் செய்தனர். வடநாட்டிலே சதி முறையால் விதவைப்பெண்களை தீயிலேற்றும் கொடுமை நிகழ்ந்த அதே காலகட்டத்தில் தான், தங்கள் ஆட்சியில் விதவை மறுமணங்களை நடைமுறைப்படுத்தினர் மருதிருவர்.
கி.பி.1801 மே 28-ந் தேதி மருது சகோதரர்களின் சிவகங்கை சீமை மீதான தாக்குதலை ஆங்கிலேயர் படை தொடங்கியது. இதனை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் திண்டுக்கல் பாளையக்காரர் விருப்பாச்சி கோபாலர், மணப்பாறை லட்சுமி, மலபார் மன்னர் கேரளவர்மன், கர்நாடக மன்னர் கிருஷ்ணப்பர், திப்பு சுல்தானின் குதிரைப்படை வீரரான மராட்டியத்தின் தூந்தாஜிவாக் போன்ற கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டணியில் இணைந்தனர். மராட்டியத் தலைவர்களிடம் பேச பல தூதுக் குழுக்களை ஏற்படுத்தினர். கொங்குப்பகுதி போராட்ட சக்திகளைக் கண்டு பேசவும் நல்லுறவை நாட்டவும் தீரன் சின்னமலை முன்வந்தார்.
தீரன் சின்னமலை தலைமையிலான கூட்டணி, 1800 ஜூன் 3-ஆம் தேதி, லெஃப்டினன்ட் கர்னல் கே.க்ஸிஸ்டரின் 5-ஆம் கம்பெனி படைப்பிரிவை தரைமட்டமாக்க எண்ணிய அவர், கோவைக் கோட்டையைத் தகர்க்கத் திட்டமிடப்பட்டது. “சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால்” கோவைப்புரட்சி தோல்வியை சந்தித்தது. இந்த கோவைப் போரில் தென்னிந்திய போராளிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், தென்னிந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்று தனி நாடாக உருவாகியிருக்கும். இது இந்தியாவின் வரலாற்றை மாற்றியிருக்கும்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
தமிழ் நாடு தாயக நாளில் தமிழின உரிமைகளை மீட்டெடுப்போம் என்று உறுதி ஏற்போம் – நவம்பர் 1, 2022
நன்று தமிழ் வளர்க! – தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக!
என்றும் தமிழ் வளர்க! – கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்து ஓங்குக!
இன்பம் எனப்படுதல் – தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக!
– பாவேந்தர் பாரதிதாசன்
ஒரு இனம் வரையறை செய்யப்படுவதும், வரலாற்றில் பதிவாகுவதும் அவ்வினம் பேசும் மொழி மற்றும் அந்த இனம் வாழும் நிலத்தின் அடிப்படியிலேதான். சங்க காலத்தில் இருந்தே தமிழ் நாட்டின் எல்லைகள் பலவாக வரையறுக்கப்பட்டன. அனைத்து இலக்கியங்களும் தென் எல்லையாக குமரியையும், வட எல்லையாக வேங்கட மலையும் கூறப்பட்டிருக்கின்றன.
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)
என்று தொல்காப்பிய சிறப்புப்பாயிரமும்,
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு (சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)
என்றும் சிலப்பதிகாரமும்,
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை (புறநானூறு,17:1-2)
என்று புறநானூறும் கூறும் தமிழ் இன நில எல்லையானது இந்திய ஒன்றியத்தின் மொழிவாரி மாநிலங்களின் பிரிவினைக்கு பின்னும், தமிழர்களின் மரபுவழி நில எல்லைகளை காக்க வடக்கெல்லை மற்றும் தெற்கெல்லை போராட்டங்கள் நடைபெற்று, ஈகியர் சங்கரலிங்கனார் அவர்களின் உண்ணாநிலை உயிர் ஈகத்திற்கு விடையாக அறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னரே இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கொண்ட நிலப்பரப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு தாயக நாள் என்பது அடையாள கொண்டாட்ட நாளில்லை. இது தமிழ் நாட்டின் இன உரிமை மீட்பை மனதில் நிறுத்த வேண்டிய நாளாகும். இந்திய ஒன்றியம் என்ற ‘ஆரிய – பார்ப்பன’ அரசியல் அதிகார வர்க்கத்திடம் இருந்தும், ‘இந்திய – ஏகாத்திபதிய – முதலாளித்துவ – பனியா’ பொருளாதார வர்க்கத்திடம் இருந்தும் தமிழர்களின் அரசியல், பண்பாடு, பொருளாதார உரிமைகளை மீட்டெடுக்க உறுதி ஏற்கும் நாளாகவே முன்நிறுத்தப்படுகிறது. இந்தி திணிப்பு தொடங்கி, தமிழ் நாட்டு நிலப்பரப்பை அதானி, அம்பானி, அகர்வால் போன்ற குஜராத் பனியாக்களின் வேட்டைக்காடாக மாற்ற நடக்கும் முயற்சிகள் வரை அனைத்தையும் தடுத்த நிறுத்த அணியமாக வேண்டியதன் இன்றியமையாமையை உணர்தலே, தமிழ் நாடு தாயகநாளில் இம்மண்ணினை பாதுகாக்க உழைத்த தமிழினப்போராளிகளுக்கு நாம் தரும் பெருமையாகும்.
தமிழ் நாடு தாயகநாளில் தமிழின உரிமைகளை மீட்டெடுப்போம் என்று மே பதினேழு இயக்கம் உறுதி ஏற்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர் தொடுத்த மாவீரன் பகத் சிங் பிறந்தநாள் இன்று (28-09-1907)
“பிற்போக்குவாத, பழமைவாத, மதவெறியர்களின் அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில் ஒரு சரியான அறிவியல்பூர்வமான புரிதல் இல்லாதன் விளைவாக, தங்களை ஆன்மீகரீதியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தங்களுடைய சொந்த உணர்ச்சிகளுக்கெதிரான போராட்டத்திற்கும், விரக்தியை வெல்வதற்கும், சொந்த சௌகரியங்கள், குடும்பங்கள் – ஏன், வாழ்க்கையையே விட்டுக்கொடுப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்துவதற்கும் உதவக்கூடிய வகையில் பகுத்தறிவுக்கொவ்வாத நம்பிக்கைகளும் இறைமைக் கொள்கையும் அவர்களுக்குத் தேவைப்பட்டன.”
]]>