கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதியை ரத்து செய்திருக்கிறது.

’தமிழகத்தில் தொடர்ந்து வரும் அடக்குமுறைக்கு’ எதிராக இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதியை ரத்து செய்திருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்குவதாக சொன்ன காவல்துறை, பின்னர் , போராட்டம் குறித்து நேரில் சந்தித்து விளக்கமளிக்கச் சொன்னது. நேரில் சந்தித்து தோழர்கள் போராட்டம் குறித்தான காவல்துறையின் கேள்விகளுக்கு விளக்கமளித்த பின்னர், அனுமதி தருவதாக சொன்னது காவல்துற்றை. பின்னர், இறுதி நேரத்தில் அனுமதி ரத்து செய்வதாக கடிதம் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக நீதிமன்றத்திற்கு செல்ல இயலாத நிலையில், போராட்டத்தை வேறு தேதிக்கு மாற்றி வைப்பதாக முடிவெடுத்திருக்கிறது மே17 இயக்கம்.

மதுரை நகரில் நடத்த இருந்த கூட்டத்திற்கு இரண்டு முறை அனுமதி மறுத்தது காவல்துறை, கோவை, திருச்சி, தஞ்சை, வேலூர் என பல இடங்களில் நடக்க இருந்த பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதியை கடந்த ஒரு மாதத்தில் ரத்து செய்திருக்கிறது. தமிழகத்தின் எந்த இடத்திலும் மே17 இயக்கம் கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ மற்றும் வேறேதுவுமான சனநாயக போராட்டம்-பிரச்சாரம் செய்ய அனுமதியை காவல்துறை மறுத்து வருகிறது.
கடந்த மாதம் புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, புதுவை காவல்துறை அனுமதி வழங்கி இருந்தது. அந்த ’அனுமதியை ரத்து செய்ய’ , புதுவை காவல்துறைக்கு, தமிழக காவல்துறை நெருக்கடி கொடுத்தது. இதனடிப்படையில் புதுவை பொதுக்கூட்டம் இறுதி நேரத்தில் அனுமதியை ரத்து செய்வதாக புதுவை காவல்துறை சொன்னது. இச்செய்தியை எங்களிடம் தெரிவிப்பதற்கு முன்னர், ஊடகங்களில் செய்தியாக்கப்பட்டது. புதுவை இயக்கங்களின் ஒத்துழைப்பால் இக்கூட்டம் வெற்றிகரமாக நடந்தது.

கருத்தரங்கங்கள் நடத்த அரங்குகளை மே17 இயக்கத்திற்கு தருவதற்கும் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்துவருகிறது. அரங்க நிகழ்வுகளையும் நடத்த இயலாத நிலையை உருவாக்கி இருக்கிறது. அரங்க உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்.
சிறையிலிருந்து தோழர்கள் விடுதலையான பொழுதில் வரவேற்க வந்த தோழர்களுக்காக தேநீர் கொடுக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறிய அரங்கின் உரிமையாளரையும் மிரட்டியது காவல்துறை. இரண்டு மணி நேரம் கூட ஒரு அரங்கில் பேச அனுமதிக்காமல் விரட்டியது காவல்துறை.

’என்ன பேசுவது’, ’யாரைப்பற்றி பேசுவது’, ’என்ன தலைப்பில் கூட்டம் நடத்துவது’ என அனைத்தையும் முடிவு செய்வதாக காவல்துறை நடந்து கொள்வது, சர்வாதிகார ஆட்சி நடப்பதான சூழலை தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறது.

அடக்குமுறைகளால் மக்கள் இயக்கங்களை வெற்றி கொள்ள முடியாது. இந்த அடக்குமுறைகள் எங்களை மேலும் மேலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும். எங்களை மேலும் மேலும் உறுதியானவர்களாக மாற்றும்…இறுதியில் நாங்களே வெல்வோம்.

வலிமையான இயக்கமாக மே17 இயக்கம் உருவெடுப்பதை எந்த ஆற்றலாலும் தடுத்து நிறுத்த முடியாது.

Leave a Reply