தமிழீழ கோரிக்கைக்காக மார்ச் 18 2012, மெரினா கடற்கரையில் திரளுவோம்

- in பரப்புரை
தமிழீழத் தமிழர்களின் நீதிக்கான கோரிக்கை

சர்வதேசத்திற்கு நமது கோரிக்கைகளை முன்வைப்போம் . மார்ச் 18 /சென்னை, மெரினா கடற்கரையில் மாலையில் திரளுவோம் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐ. நாவே நடத்தவேண்டும் எனவும் சுதந்திரமான சர்வதேச விசாரணையை இலங்கை அரசு மீது நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசியல் சமூக இயக்கங்கள் சர்வதேசத்திற்கு கோரிக்கை வைக்கிறது. அமெரிக்காவினால் தற்போது முன்மொழியப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானமானது ஒரு முக்கியமான வரலாற்று காலகட்டத்தை தெற்காசிய வரலாற்றில் கொண்டு வந்துள்ளது உண்மையே. உலக அளவில் இலங்கை ஒரு கவனிப்பிற்கும், நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ள இந்தத் தருணத்தில் தமிழீழத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை, இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தீர்மானத்தில் இணைப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதியாகும். கொண்டு வரப்பட இருக்கிற தீர்மானம் அதன் உள்ளடக்க அளவிலும் செயல்பாட்டளவிலும் தமிழர்களின் நீண்ட நாள் துயரத்தையும், அவர்களுக்கு இழைக்கப்படுகிற அரசியல்-சமூக அநீதியையும் தீர்ப்பதற்கான வலிமை குறைந்து காணப்படுகிறது என்பதை தமிழர் உலகம் அறிந்தே இருக்கிறது.

இலங்கை அரசின் நீதி பரிபாலனைகளுக்குள்ளாக நீதி வழங்கப்படுவதென்பது உலக நீதி வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. ஏனெனில் இலங்கையின் சனநாயக கட்டமைப்புகள் சிங்களவாதம் சார்ந்திருக்கிறது என்றும், சர்வதேச விதிகளின் படி அமையவில்லை எனவும் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு சமயங்களில் ஆதாரப்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் உலகிற்கு அறிவித்து இருக்கிறார்கள். தோல்வியடைந்த இந்த சனநாயக அரசு கட்டமைப்பு, தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்காது என்பது, மனித உரிமை மீறல் குறித்த இலங்கையின் உள் நாட்டு விசாரணை மூலமாக அறியப்பட்டு இருக்கிறது. இதை சர்வதேச நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆக மீண்டும் ஒரு வாய்ப்பை சர்வதேசம் இலங்கைக்கு வழங்கும் பட்சத்தில் ஏமாற்றமே மிஞ்சும்.

மேலும் இந்த அநீதிகளின் பால் துன்பத்திற்குள்ளாகிய தமிழ்ச் சமூகத்திற்கு கிடைக்கும் நீதி என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். எந்த கோரிக்கைக்காக துன்பத்தை அனுபவித்தார்களோ அந்த கோரிக்கையையே சர்வதேசச் சமூகமும் அங்கீகரித்து ஐ.நா தனது தீர்மான வரைவிற்குள் கொண்டு வருதல் அவசியம். இதன் மூலமாக பாதிக்கப்பட்டச் சமூகத்திற்கு நீதி கிடைக்கும். இத்தகைய வழிமுறையையே சர்வதேசமும், ஐ.நா.வும் பல்வேறு காலகட்டங்களில் பல அரசு சிக்கல்களுக்கு பின்பற்றி இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறோம். எனவே சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மற்றும் தனித் தமிழீழம் தொடர்பாக ஈழத் தமிழர்களின் விருப்பம் அறிய பொது வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கை.

தொடர்ந்து இந்திய அரசு இலங்கை அரசை காப்பற்றி வருகிறது. இதன் மூலம் இந்தியாவும் இனப்படுகொலையில் ஒரு பங்காளி என்பதை நிரூபிக்கிறது. இனிமேலும் கொலையாளியான இலங்கை அரசை காக்காமல் சர்வதேச விசாரணை முன்பு இலங்கையை நிறுத்துவதற்கு இந்தியா முயற்சி எடுப்பது அவசியம். இதன் பொருட்டு ஐ.நா.வில் கொண்டு வரப்பட இருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக, இலங்கையை சர்வதேச விசாரணைக்குக் கொண்டுவரவும், பொது வாக்கெடுப்பை நடத்தவும் துணை நிற்கவேண்டும். தமிழக சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தை புறக்கணிக்கும் விதமாக இந்திய அரசு தொடர்ந்து செயல்படுகிறது. தமிழர்களின் உணர்வையும் நீதியையும் புறக்கணிப்பது நேர்மையாகாது. ஆகவே இந்திய அரசு தமிழகத்தின் கருத்தை கவனத்தில் கொண்டு தீர்மானத்திற்கு ஆதரவாக நிற்பதோடு இலங்கை அரசை சர்வதேச விசாரணைப் பிடிக்குள் கொண்டு வருவதற்கான வேலையைச் செய்தல் அவசியம். இதுவே தமிழர்களின் உடனடிக் கோரிக்கை. இதை இந்திய அரசு கவனத்தில் எடுத்தல் அவசியமும் கட்டாயமும் ஆகும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்த, வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி சென்னை, மெரினா கடற்கரையில் மாலை 4 மணி முதல் தமிழர்கள் ஒன்று திரண்டு தமிழீழத்தமிழர்களுக்கான தங்களது ஆதரவையும், தமிழர்களின் கருத்தை இந்திய அரசு ஆதரிக்கக் கோரியும், சர்வதேச தீர்மானத்தில் தமிழர்களின் கோரிக்கை உள்ளடக்கியதாக இருக்கக் கோரியும் வலியுறுத்துவோம். தமிழர்களே சாதி, கட்சி, மதங்களை கடந்து திரண்டு வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்








Leave a Reply