காலச்சுவடும் , தமிழக மீனவர் படுகொலையும் தமிழக மீனவர்களை கொலை செய்ய நடக்கும் சதிகள்

- in பரப்புரை
கருத்தரங்கம் – சென்னை
தமிழக மக்கள் உரிமைக் கழகம் | மே பதினேழு இயக்கம்

காலச்சுவடு பத்திரிக்கை ஆழசிந்தித்தே கட்டுரைகள் வெளியிடும் பத்திரிக்கையாக தமிழ் உலகம் அறியும். இந்த மாத இதழில் தமிழக மீனவர் படுகொலை பற்றிய சூரியநாரயணன் பேட்டி மீனவர் படுகொலைக்கான அடிப்படை நீதித்தேடல் என்பதில் இருந்து நழுவி பிரச்சனையின் மையம் என ஒரு பொய்யான திரிபு கதை முன்வைக்கப்படுகிறது. இதை எந்த வித கேள்வியுமின்றி, முரணுமின்றி காலச்சுவடு பேட்டியை நடத்திச்சென்றுள்ளது அதிர்ச்சிகரமானதாகவும், வருந்தத்தக்கதாகவும் உள்ளது. இதில் வெளியாகி இருக்கும் புரட்டை உடைக்கும் விதமாகவும், உண்மை நிலையையும், படுகொலையாளிகளை கைது செய்து தண்டிக்க நடக்கும் வழக்கு பற்றியும் விரிவாக பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

25 ஆண்டுகளாக இலங்கைக் கடற்படை 539 தமிழக மீனவர்களைக் கொன்றிருக்கிறது.  ஆனால் கொலை செய்த இலங்கைக் கடற்படை கொலைகாரர்களை கைது செய்யவோ கண்டிக்கவோ முற்படவில்லை.  தமிழக மீனவனைக் காக்க இந்திய கடலோரக் காவல் படையை பலப்படுத்த, நவீனப் படுத்த வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, இலங்கைக்கு கடற்படைக்கு கப்பலும் பயிற்சியும் ஆயுதமும் ஆதரவும் இந்தியா வழங்குகிறது.  கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றவுடன், மீனவப் படுகொலையை திசைதிருப்பும் முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையில் இல்லாமல் இழுவைப் படகு பயன்படுத்துவதாலே இக்கொலைகள் நடப்பதாக திசை திருப்பப்படுகிறது.  ஆனால் இதுவரை கொல்லப்பட்ட மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடித்தலை செய்பவர்களே. இத்திசைதிருப்பலை செய்பவர்கள் சென்னையைச் சார்ந்த உயர்சாதி குழுவினர் முன்னால் அரசு அதிகாரிகளும் மற்றும் “இந்து” பத்திரிக்கை ஆசிரியர் உள்ளிட்ட சில முன்ணனிப் பத்திரிக்கையாளர்களே.

இவ்வாறு செய்வதன் மூலமாக இந்த மீனவர்கள்  படுகொலை விசாரணையிலிருந்து இந்திய, இலங்கை அரசுகளை காப்பாற்றுவதுடன்  இனிமேலும் தமிழக மீனவர்களை படுகொலை செய்வதில் நியாயம் உள்ளது என்கிற பேச்சை முன்வைக்கின்றனர்.

இந்த உயர்சாதிக் குழுக்களை, பத்திரிக்கையாளர்களை பொய் செய்திகளை பரப்புவதிலிருந்து தடுக்காவிட்டால் நமது மீனவர்களை படுகொலை செய்வது அதிகரிக்கும்.
கடல் எல்லை கடந்து மீன் பிடிப்பது உலகெங்கும் நடக்கக்கூடிய ஒன்று.  தமிழக மீனவனைத் தவிர உலகில் எந்த மீனவனும் இதற்காக கொலை செய்யப்பட்டது இல்லை. கட்சத்தீவு இலங்கைக்கு அளித்தது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி மாபெரும் குற்றமாகும்,  இதை மக்களிடத்தில் மறைத்து  மக்களை திசை திருப்பும்  சதியைப்பற்றி மேலும் விரிவாக விளக்க அறிஞர்கள் பேச இருக்கிறார்கள். இந்த கருத்தரங்கை தமிழக மக்கள் உரிமை கழகமும், மே பதினேழு இயக்கமும் ஒருங்கிணைக்கிறார்கள்

வழக்கறிஞர் பா. புகழேந்தி
கா. அய்யாநாதன்
சீதையின் மைந்தன் – கட்சதீவு மீட்பு இயக்கம்
மகேஷ் – பாரம்பரிய மீனவர் சங்கம்

இதற்கான கருத்தரங்கு சென்னை தி.நகர்.  செ.தெ. நாயகம் பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (20.3.2011) அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.  சதிகளை தகர்க்க வாரீர்.

தமிழக மக்கள் உரிமைக் கழகம் | மே பதினேழு இயக்கம்
7871167265 – 9884877487

தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 1
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 2
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 3
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 4
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 5
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 6
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 7
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 8
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 9
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 10
தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 11
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 12
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 13
 தமிழக மீனவர் படுகொலை கருத்தரங்கம் – 14

காலச்சுவட்டில் வந்துள்ள முழுமையான கட்டுரை


“பாக் நீரிணையைச் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதக் கூடாது” டாக்டர் வி. சூரியநாராயண்

http://www.kalachuvadu.com/issue-135/page20.asp

சந்திப்பு: கே. முரளிதரன்

தமிழக மீனவர்கள் இப்படித் தாக்கப்படும் பிரச்சினை எப்போது தொடங்கியது?

1974 வரை பெரிதாகப் பிரச்சினை கிடையாது. 1974 மற்றும் 76இல் இரு நாடுகளுக்கும் இடையில் கடல் எல்லையைப் பிரித்த பிறகுதான் பிரச்சினை தொடங்கியது. அதன் பிறகு, இது உங்கள் பகுதி இது எங்கள் பகுதி என்று ஆகிவிட்டது. ஆனால் மீனவர்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அப்போது இலங்கையில் பெரிய கடற்படை ஏதும் கிடையாது. ஏதோ பெயரளவுக்கு இருந்தது. நிறைய பேர் இங்கேயிருந்து சட்ட விரோதமாக அங்கே சென்று வேலைபார்த்துவந்தனர். கள்ளத்தோணிக்காரர்கள் எனத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் பெயரே இருந்தது. கடற்படையினர் பெரும்பாலும் இம்மாதிரி ஆட்களைக் கைதுசெய்வார்கள். 1974 ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இது பெரிய தவறு. அந்த ஒப்பந்தத்தின் 5 மற்றும் 6ஆம் பிரிவுகளின்படி கச்சத்தீவைச் சுற்றிலும் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் வலைகளை உலர்த்தலாம், புனித அந்தோணியார் கோவிலுக்கு வரலாம் என்று மட்டும் இலங்கை கூறியது. அப்போது எல்லோரும் பருத்தி வலைகளையே பயன்படுத்தினர். அவற்றை உலர்த்த வேண்டியிருந்தது. இப்போது நைலான் வலைகள் வந்துவிட்டன. இவற்றை உலர்த்தும் கேள்வியே இல்லை. அதனால் வலைகளை உலர்த்தக் கச்சத் தீவு தேவை என்ற முக்கியத்துவம் போய்விட்டது.

அதன் பிறகு இனப் பிரச்சினை தொடங்கிவிட்டது. அங்கிருந்து போராளிகள் இங்கு வருவது, இங்கிருந்து மருந்து, எரிபொருள், ஆயுதம் கடத்தப்படுவது போன்றவையும் ஆரம்பித்தன. இதற்குப் பிறகுதான் இலங்கை ராணுவம் இதன் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தது. திருமதி பண்டாரநாயக ஆட்சிக்கு வந்த பிறகு, பல பொருள்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதைத் தடைசெய்தார்.

இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் மணப்பெண்ணுக்குக் காஞ்சிபுரம் புடவையை அளிக்க விரும்புவார்கள். அதனால், அவர்கள் வல்வட்டித் துறைக்கு வந்து அங்கிருக்கும் மீனவர்களை அணுகுவார்கள். அவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து சேலையை வாங்கிவந்து கொடுப்பார்கள். அதில் அவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். தமிழ்ப் பத்திரிகைகளுக்குக்கூடத் தடை விதிக்கப்பட்டது. நம்மைப் பொறுத்தவரை தான் இது கடத்தல். மீனவர்களைப் பொறுத்தவரை இது கடத்தல் அல்ல. தொழில். ஆனால் பாக் நீரிணை வழியாகத் தமிழ்ப் போராளிக் குழுக்கள் தமிழகத்திற்குச் சென்றுவர ஆரம்பித்த பிறகுதான் இலங்கைக் கடற்படை இதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தார்கள்.

எப்போது முதல்முறையாகத் தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது?

முதல்முறையாக 1983 ஆகஸ்ட் மாதம்தான் நடத்தப்பட்டது. நம் மீனவர்கள் மட்டும்தான் இலங்கைக் கடற்பகுதிக்குச் செல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் நமது பகுதிக்கு வந்து மீன் பிடிக்கவே செய்தார்கள். இலங்கையில் மத்தி மீன் மிகப் பிரபலம். அந்த மீன் இந்தியப் பகுதியில் கிடைப்பதால் அதைப் பிடிக்க வருவார்கள். இந்தியர்கள் அந்த வகை மீன்களைப் பெரிதாக விரும்புவதில்லை. இந்த மீனைப் பிடிப்பதற்காக அவர்கள் மினிகாய், அந்தமான் தீவுகள்வரை செல்வார்கள். இவர்களில் பலர் இந்தியக் கடலோரக் காவல் படையால் பிடிபட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நம் காவல் படையினர் சுடுவதில்லை. சட்டப்படியே நடத்துவார்கள். மற்றொரு நாட்டின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பவர்களைச் சுடுவதைச் சர்வதேசச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை.
போர் நடந்த காலத்தில் அவர்கள் போராளிகளா மீனவர்களா என்பது தெரியாமல் சுட்டார்கள். படகின் அருகில் சென்று சோதிக்கப் பயந்து சுட ஆரம்பித்தார்கள். அச்சம்பவங்கள் அனைத்துமே இலங்கைக் கடற்பகுதிக்குள்தான் நடந்தன.

1968இல் இந்தியா பெரும் அன்னியச் செலாவணிச் சிக்கலில் இருந்தது. அப்போது இந்திய அரசு ஏற்றுமதியைப் பெரிய அளவில் ஊக்குவித்தது. அந்த நேரத்தில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இறால்-குறிப்பாகச் சிங்கிறால் -மிக விருப்பமான உணவாக இருந்தது. அவற்றைப் பெரிய அளவில் பிடிப்பதற்காக தமிழகத்தில் பாக் நீரிணையில் ட்ராலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை கடலின் அடிப்பகுதியையே சுரண்டிவிடக் கூடியவை. பெருமளவில் அன்னியச் செலாவணி தேவை. அதனால் மீன்களை எவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிடிக்க வேண்டும் என்றானது.

சில வருடங்களில் இந்தியப் பகுதிகளில் மீனே இல்லாமல் போனது. தவிர, இந்த மீன்பிடித் தொழிலில் நிறைய வருமானம் வர ஆரம்பிக்கவும் மீனவர் அல்லாத ஜாதியினரும் இந்தத் தொழிலில் குதித்தனர். பாரம்பரியமாக மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் கூலித் தொழிலாளர்களானார்கள். சமீபத்தில் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்டவர்கள்கூட, ட்ராலர் முதலாளிகள்தாம் தங்களை இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன் பிடிக்குமாறு வற்புறுத்துவதாகக் கூறியுள்ளனர்.

ட்ராலர்கள் பெருமளவில் மீன்களைச் சுரண்ட ஆரம்பித்ததும் பாரம்பரியமாகக் கட்டுமரங்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் ட்ராலர்களில் மீன் பிடிப்பவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கரையை ஒட்டிய முதல் 5 நாட்டிகல் மைல் பகுதியில் ட்ராலர்கள் மீன்பிடிக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. கட்டு மரங்கள் மீன்பிடிக்கலாம். இப்போது கட்டுமரங்கள் பெரிய அளவில் இல்லை. எல்லாம் வல்லங்கள். ஆனால் இப்போது சிறிய வல்லங்களில்கூட எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. தற்போது மீன்பிடிக்க வருடத்தில் நாற்பத்தைந்து நாட்களுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. ஆனால் இது வல்லங்களுக்குப் பொருந்தாது. எஞ்சின் பொருத்தப்பட்ட வல்லங்களே இலங்கைவரை செல்கின்றன. தவிர ட்ராலர்களில் பொதுவாக வாரத்திற்கு மூன்று நாட்கள்தான் – திங்கள், புதன், சனி- மீன்பிடிக்கச் செல்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு ட்ராலர்கள் இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கிறது. இவர்கள் பெரும் எண்ணிக்கையில் செல்வதாலும் இந்திய மீனவர்கள் என்பதாலும் இந்தியக் கடலோரக் காவல் படை எதுவும் செய்வதில்லை.

இலங்கை யுத்தத்தால், இனக் கலவரத்தால் மீன்பிடித் தொழில் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டது?

83க்குப் பிறகு இலங்கைத் தமிழர் பகுதிகளில் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுவிட்டது. இதனால் அங்கு வாழும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதில் மன்னார் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த மீனவர்கள் இங்கே அகதிகளாக வரத் தொடங்கினர். இந்திய மீனவர்களுக்காக வேலை பார்க்கத் தொடங்கிய அவர்கள் இலங்கை அருகில் எங்கே மீன் கிடைக்கும் என அடையாளம் காட்டினர். 2002இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அப்போது இலங்கையில் தமிழர்களில் ஒரு பகுதியினர் மீன்பிடித்தலுக்குச் செல்லத் தொடங்கினர். ஒரு சமயம் விடுதலைப் புலிகளே நம் மீனவர்களைக் கைதுசெய்தனர். அவர்களை விடுவிக்க நம் மீனவர்கள் பெரும் தொகையை நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் இருப்பதைவிட அங்கே மீன்பிடித் தொழில் அதிகம். 83க்கு முன்பு, இலங்கையின் 38 சதவீத மீன் உற்பத்தி யாழ்ப்பாணத்திலிருந்துதான் வந்தது. 83க்குப் பிறகு, இலங்கையின் தென்பகுதியிலும் மீன்பிடித் தொழில் வளர ஆரம்பித்தது. அவர்களும் எந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், ட்ராலர்கள், பல நாட்கள் கடலில் இருக்கும் வகையிலான படகுகள் ஆகியவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். மீன்களை இந்தப் படகுகளிலேயே பதப்படுத்தும் வசதிகளும் இருந்தன. அவர்களும் வடபகுதியில் வந்து மீன்பிடிக்க ஆரம்பித்தனர்.

தமிழக மீனவர்கள். இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் மூன்று நாட்களில் நெடுந்தீவு மீனவர்கள் கடலுக்கே செல்ல மாட்டார்கள். காரணம், இந்தியப் படகுகளால் அவர்களது வலைகள் அறுக்கப்படுவதுதான். இரண்டு ட்ராலர்களுக்கு நடுவில் இரும்பு உருளையுடன்கூடிய வலை போடப்பட்டிருக்கும். இதற்கு நடுவில் செல்லும் சிறிய படகுகளின் வலைகள் அறுக்கப்பட்டுவிடும். இதனால், அவர்கள் சுத்தமாக மீன் பிடிக்க முடியாமலே போய்விடுகிறது. காரைநகர், பருத்தித் துறை, வல்வெட்டித்துறை, குருநகர் என எல்லா இடங்களிலும் இதே பிரச்சினைதான்.

1983க்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது?

83க்கு முன்பு நிலைமை மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது. இலங்கைக் கடற்படை கிடையாது. மீனவர்கள் சாதாரணமாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். நூல் வலைகள்தாம். ஆனால் 77க்குப் பிறகு பைபர் கிளாஸ் படகுகளை அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால் நம் மீனவர்கள் அறுபதுகளின் மத்தியிலிருந்தே ட்ராலர்களைப் பயன்படுத்திவந்தனர். ஆனால் 83வரை பிரச்சினை, ஏதும் ஏற்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் ட்ராலர்களை வாங்க மானியம் அளிக்கப்பட்டது. இதனால், மீனவரல்லாத சாதியினரும் இந்தத் தொழிலில் குதித்தனர்.

இந்தப் பிரச்சினையைப் பற்றி இலங் கையிலிருக்கும் தமிழ் மீனவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

தமிழக மீனவர்கள் எங்கள் பகுதியில் வந்து மீன்பிடிப்பதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அவர்கள் ட்ராலர்களைப் பயன்படுத்துவதுதான் பிரச்சினை. இன்னும் இரண்டு வருடம் அவர்கள் தொடர்ந்து ட்ராலர்களைப் பயன்படுத்தினால் இங்கேயும் மீன் இருக்காது என்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் ஒரு தீர்வு வர வேண்டுமென, நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டணியின் தலைவரான விவேகானந்தன் போன்றோர் ஒரு முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது, பாக் நீரிணையின் இருபுறமும் இருக்கும் மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்துவது. இது தொடர்பாக ஆகஸ்ட் 2010இல் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. முதல்முறையாகத் தமிழக மீனவர்கள், ட்ராலர்கள் கடல் வளத்தை நாசமாக்குகின்றன என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ட்ராலர்கள் பயன்படுத்துவதை ஒரு வருடத்திற்குள் படிப்படியாக விலக்கிக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, வாரத்திற்கு மூன்று நாட்கள் மீன்பிடிப்பது என்பதை இரண்டு நாட்களாகக் குறைப்பது. அல்லது வருடத்திற்கு 70 நாட்கள் மட்டுமே மீன்பிடிப்பது. மூன்றாவதாக, இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் 3 நாட்டிகல் மைல் அளவுக்குச் செல்லலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. பிறகு நான் தில்லி சென்றிருந்த போது, இந்தியாவுக்கான இலங்கைத் தூதரிடம் பேசினேன். ஆனால் மீனவர்களுக்கிடையிலான ஒப்பந்தம் செல்லாது என அவர் குறிப்பிட்டார். ஏதாவது ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமானால், அது அரசுகளின் மூலமாகத்தான் ஏற்பட வேண்டும் என்றார் அவர். தவிர, இந்த ஒப்பந்தத்தை எல்லா மீனவரும் ஆதரிக்கவில்லை. இதனால் நம் மீனவர்கள் இந்த ஒப்பந்தத்தை மீற ஆரம்பித்தனர். இப்போது இது மிக மிக அதிக அளவில் நடக்கிறது. இதனால்தான், அந்த மீனவர்கள் நம்முடைய மீனவர்களைப் பிடித்துச் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

நம்முடைய மீனவர்கள் பிடிக்கப்படும்போதெல்லாம் கருணாநிதியும் ஜெயலலிதாவும் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். உடனே அவரும் இவர்களுக்குப் பதில் எழுதுகிறார். பிறகு மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். இது, தீப்பிடித்த பிறகு தீயை அணைப்பது போல. தீப்பிடிப்பதற்கான காரணத்தையே அகற்றுவதுதான் சரியானதாக இருக்கும்.
இந்தப் பிரச்சினையில் கச்சத்தீவு முக்கிய இடத்தை வகிக்கிறது. அதற்கு அருகில்தான் நிறைய மீறல்கள் நடக்கின்றன. இந்தியா – வங்கதேச எல்லையில், தீன்பிகா என்றொரு இடம் இருக்கிறது. அதை நீண்டகாலக் குத்தகைக்கு வங்க தேசத்திற்குக் கொடுத்துவிட்டோம். அதேபோல, கச்சத்தீவையும் இந்தியா நீண்டகாலக் குத்தகைக்கு எடுக்க வேண்டும். தற்போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்த நிலைப்பாட்டைத்தான் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு கச்சத்தீவு விவகாரத்தைத் தொடவே விரும்பவில்லை.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. 1974இல் செய்யப்பட்ட பாக் நீரிணை ஒப்பந்தம். அடுத்ததாக மன்னார் வளைகுடா ஒப்பந்தம். இது 1976இல் செய்யப்பட்டது. அப்போது இலங்கை மீனவர்கள் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வேட்ஜ் பேங்க்வரை வந்து மீன் பிடிப்பது வழக்கமாக இருந்தது. பேச்சு வார்த்தைகளின்போது இலங்கை மீனவர்கள் வேட்ஜ் பேங்க் பகுதியில் 1979 வரை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீன்பிடிக்கலாம் என இந்திய அரசு கூறியது. ஆனால் மீன்பிடிக்கும் படகுகள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆக, உரிமம் அளித்து மீன்பிடிக்கும் வழக்கத்திற்கு முன்னுதாரணம் இருக்கிறது. அதனால், நான் ஒரு ஆலோசனையை முன்வைத்தேன். அதன்படி, இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்பகுதிக்குள் 5 கடல் மைல் அளவுக்கு மீன்பிடிக்க அனு மதிப்பது. பதிலாக இந்தியாவுக்குச் சொந்தமான பிரத்யேகப் பொருளாதார மண்டலப் பகுதியில் இலங்கை மீனவர்களை அனுமதிக்கலாம். அவர்கள் விரும்பும் மத்தி மீன்கள் அந்தமான் அருகில் கிடைக்கின்றன. 2003இல் இந்தியா – இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடந்தது. உரிமம் அளித்து மீன்பிடிக்க அனு மதிப்பது குறித்துப் பரிசீலிக்க இலங்கை ஒப்புக்கொண்டது. இது நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னமும் இந்த யோசனை பரிசீலனை அளவிலேயே இருக்கிறது. இதில் தமிழ்நாடு அரசும் கவனம் செலுத்தவில்லை. இந்திய அரசும் கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசில், மீன் வளம் என்பது விவசாய அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அது வேறு எந்த நாட்டு மீனவரையும் இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடிக்க அனு மதிக்க விரும்பவில்லை. 2008 அக்டோபரில் ஈழப் போர் உச்சத்தில் இருந்தபோது எம். கே. நாராயணனும் சிவசங்கர மேனனும் இலங்கைக்குச் சென்றனர்.
அப்போது கோத்தபய ராஜபக்சே சொன்னார்: “இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியில் மீன்பிடிக்கலாம். நாங்கள் அவர்களைச் சுடமாட்டோம். ஆனால் அவர்கள் உயர்பாதுகாப்புப் பகுதிக்குள் நுழையக் கூடாது. தவிர, எல்லா மீனவர்களும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அவர்கள் வரும் படகின் பதிவுச் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.” இது வெறும் வாய்மொழி ஒப்பந்தம்தான். ஈழப் போர் உச்சத்தில் இருந்தபோது அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டார்கள். ஏனென்றால் இந்தியாவில் பெரிய அளவில் எதிர்ப்பு உருவாவதை அவர்கள் விரும்பவில்லை. எல்லாம் முடிந்த பிறகு இப்போது இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை.
சமீபத்தில் தமிழக மீனவர் கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொலைசெய்யப்பட்டது வேண்டுமென்றே நடந்த சம்பவம் என்று தான் நினைக்கிறேன். நம்முடைய மீனவர்கள் ஒவ்வொரு மணி நேரத்திலும் எங்கே இருப்பார்கள் என அவர்களுக்குத் தெரியும். இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கி, சிக்கலாக்க அவர்கள் விரும்புகிறார்கள்.

இதனால், இலங்கைக் கடற்படைக்கு என்ன லாபம்?

சார்க் மாநாட்டில் அவர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்ப விரும்புகிறார்கள். அதற்கு எதிராக வாதிட நம் பக்கம் நியாயம் ஏதும் இல்லை என்பதுதான் இதற்குக் காரணம். இந்திய மீனவர்கள் வரம்பு மீறிச் செல்கிறார்கள். முடிந்தால் இந்தப் பிரச்சினையைச் சர்வ தேச நீதிமன்றத்திற்கும் எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இந்த அளவுக்கு எதிர்வினை இருக்குமென அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால், தற்போது பின்வாங்குகிறார்கள். சமீபத்தில் நிருபமா ராவ் இலங்கை சென்று வந்திருக்கிறார். இதன் முக்கியத்துவம் என்ன? ஜனவரி 30ஆம் தேதியன்று நிருபமா இலங்கைக்குச் சென்றார். அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்தார். நிலைமையின் தீவிரத்தைக் குறைப்பதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம். பிறகு நம் மீனவர்கள்மீது சுடமாட்டோம் என அவர்கள் சொன்னார்கள். முதல்முறையாக மீனவர்களுக்கு இடையிலான ஒப்பந்தம் பற்றி அவர்கள் பேசினார்கள். நவம்பரிலிருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வேண்டும். ஆனால் அதற்கு முன்பு இந்தத் திட்டம் தமிழக அரசு, இந்திய அரசு, இலங்கை அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால் இதுவரை மீனவர் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட திட்டங்களை இலங்கை அரசு ஊக்குவிக்கவில்லை.

இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

இலங்கை மீனவர்களும் கடலை நம்பி இருக்கிறார்கள். அவர்களும் பிழைக்க வேண்டும் எனத் தமிழக மீனவர்கள் உணராத வரை எந்த ஒப்பந்தமும் சரிவராது. அவர்களது வாழ்வாதாரத்தை நாம் உறுதிசெய்ய வேண்டும். அடுத்ததாக, பாக் நீரிணையைச் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதக் கூடாது. இதை இருவருக்கும் பொதுவான பகுதியாகக் கருத வேண்டும். இதை நிர்வகிக்கப் பாக் நீரிணை ஆணையம் என்னும் அமைப்பை உருவாக்க வேண்டும். மீன் வள நிபுணர்கள், இந்தியா, இலங்கை நாடுகளின் பிரதி நிதிகள், கடல் சூழலியலாளர்கள் இதில் இடம்பெற வேண்டும். சூழல் பாதிக்காத அளவுக்கு இந்தப் பகுதியில் எவ்வளவு மீன் பிடிப்பது என்பதை இவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். என்னவிதமான படகுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை விவாதிக்க வேண்டும்.

எம். எஸ். சுவாமிநாதன் பஃவுண்டேஷனைச் சார்ந்தவர்கள், கடல் சூழலைச் செறிவாக்குவது தொடர்பாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கூட்டு முயற்சியாக்க வேண்டும்.

அடுத்ததாகப் பல நாட்கள் கடலில் இருக்கும் வகையிலான படகுகளைப் பயன்படுத்தி ஆழ் கடல் மீன்பிடிப்பிற்குச் செல்ல வேண்டும். பதப்படுத்தும் வசதிகளைக் கொண்ட மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தியா – இலங்கைக் கடற்பரப்பில் கூட்டு முயற்சியில் மீன்பிடிக்க வேண்டும். ட்ராலர்கள் பயன்படுத்துவதை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும். ட்ராலர்களை ஒழிக்க வழி இருக்கிறது. அரசே அவற்றைத் திரும்ப வாங்கி அந்தமான் போன்ற பகுதிகளில் பயன்படுத்தலாம். அங்கே கடல் பகுதிகள் ஆழமானவை. அங்கே ட்ராலர்களைப் பயன்படுத்துவதில் பிரச்சினை இல்லை. இப்போது எல்லா மாநிலங்களிலுமே அம்மாநில அரசுகள் கடல் காவல் துறையைப் பெரிய அளவில் உருவாக்கிவருகின்றன. இந்தக் கடல் காவல் துறையினரிடம் பெரும் எண்ணிக்கையில் ஜீப் போன்ற வாகனங்கள்தாம் இருக்கின்றனவே தவிர, படகுகள் இல்லை. இந்த ட்ராலர்களை வாங்கிக் கொஞ்சம் மாற்றிக் கடல் காவல் துறையினருக்கு வழங்கலாம்.

மூன்றாவதாக, இந்த ட்ராலர்களைச் சூழல் சுற்றுலாவுக்குப் பயன்படுத்தலாம். இந்தப் படகுகளை வாங்கி எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை அறியத் தமிழக அரசு ஒரு குழுவை நியமிக்க வேண்டும். தவிர, தற்போது மீன்வளம் குறைந்துவிட்டதால், நிறைய பேர் தற்போது ட்ராலர்களைப் பயன்படுத்துவதும் இல்லை.

இந்திய மீனவர்கள் சுடப்படும் சம்பவங்கள் நடக்கும்போது நாங்கள் சுடவில்லை என்கிறது இலங்கைக் கடற்படை. உண்மையை எப்படிக் கண்டறிவது?

இது முக்கியமான விஷயம். இதைக் கண்டுபிடிப்பது மிகச் சிக்கலான காரியம். ஆனால் செய்ய முடியும். ஒவ்வொரு கப்பலுக்கும் ஒரு லாக் புக் இருக்கும். அதாவது, ஒரு கப்பல் ஒரு நேரத்தில் எந்த இடத்தில் இருந்தது என்பதை அதில் குறித்துவைக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் கூட்டாக இணைந்து இது குறித்து விசாரிக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்வார்களா எனத் தெரியவில்லை. ஆனால் கண்டுபிடிக்க வேண்டுமானால் இதுதான் வழி. சமீபத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு சென்னைக்கு வந்த இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவம்சம், இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவு ஏற்படுத்த நினைக்கும் சக்திகளின் வேலை என்றார். அவர் புலிகளை மனத்தில் வைத்துச் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது புலிகள் எங்கே இருக்கிறார்கள்? இந்தமுறை இலங்கைத் தமிழ் மீனவர்களே நம் மீனவர்களைப் பிடித்துச் சென்றார்கள். எத்தனை நாட்கள்தான் தங்கள் பிழைப்பு பாதிக்கப்படுவதை அவர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்?

இந்தச் சம்பவத்தை வைத்து, இலங்கைத் தமிழ் மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்ல முடியுமா?

இலங்கைத் தமிழ் மீனவர்களின் கதை மிகப் பரிதாபகரமானது. ஒருபக்கம் உயர்பாதுகாப்புப் பகுதியில் மீன்பிடிக்க முடியாது. மற்றொரு பக்கம் சிங்கள மீனவர்கள். இன்னொரு பக்கம் நம்முடைய மீனவர்கள். அவர்கள் அழுகிறார்கள். அவர்களும் பிழைக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். அதுவரை இந்தப் பிரச்சினை தீராது.

கட்ச் மீனவர்கள் பிறநாட்டு எல்லைகளுக்குச் செல்லும்போது பிரச்சினை வருகிறதா?

குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் பகுதிகளுக்குள் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இலங்கை மீனவர்கள் இங்கே வரும்போது அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?

அவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். பிறகு விசாரிக்கப்பட்டு, சில அமைப்புகளின் மூலம் விடுவித்துத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இலங்கைப் பகுதிக்குச் செல்லும் நம் மீனவர்களில் ஒரு சதவீதத்தினர்கூடக் கைதாவதில்லை. தவிர, அந்தப் பகுதிக்குப் போகும்போதெல்லாம் பெரும் அறுவடையுடன் திரும்புகிறார்கள்.

இலங்கையின் தமிழ்ப் பகுதி அரசியல்வாதிகள், எம்.பிக்கள் ஆகியோருக்கு இது பற்றி என்ன பார்வை இருக்கிறது?

அவர்கள் இதைப் பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் இந்தியாவுடனான உறவைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இருதரப்புக்கும் ஏற்புடைய தீர்வை நாட வேண்டும் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா. மீன்வளம் குறைந்துவிட்டதால், மீனவர்களை வேறு தொழிலிலும் ஈர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்லலாம். இந்தத் துப்பாக்கிச் சூடு, கைது எல்லாமே இலங்கைப் பகுதியில்தான் நடக்கின்றன. இலங்கைக் கடற்படை ஒருபோதும் இந்தியாவுக்குள் வருவதில்லை.

இலங்கையில் ட்ராலர்கள் பயன் படுத்துகிறார்களா?

இலங்கையில் ட்ராலர்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நீங்கள் யாழ்ப்பாணத்திற்குப் போய்வந்தீர்கள், அந்தப் பயணம் பற்றிச் சொல்லுங்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம் இருந்தது. அதற்கு நெதர்லாந்து அரசு நிதியுதவி செய்திருந்தது. யாழ், கேப்டவுன் பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. சிறிய மீன்பிடிப் படகுகளைவைத்து மீன்பிடிப்பது பற்றி அவர்கள் இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் கருத்தரங்கு கேப்டவுனில் நடந்தது. இரண்டாவது கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடந்தது. ஆறு நாட்கள் இந்தக் கருத் தரங்கு நடந்தது. குருநகர், வடமராச்சி போன்ற யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்குப் போக முடிந்தது.

யாழ்ப்பாணம் இப்போது எப்படி இருக்கிறது?

பெரிய ஹோட்டல்கள் நிறைய வந்துவிட்டன. யாழ்ப்பாணம் மிகக் கட்டுப்பெட்டித்தனமான நகரம். தமிழ்நாட்டைவிட ஆச்சாரமான நகரம். பெண்கள் சேலை போன்ற உடைகளைத்தான் அணிவார்கள். இப்போது சிங்களர்கள் நிறைய வந்துவிட்டார்கள். எங்கே பார்த்தாலும் ராணுவம். பெரிய பிரச்சினை ஏதும் இல்லை. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 சாலை மிக மோசமான நிலையில் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் தேநீர்க் கடைகள் போன்றவற்றைச் சிங்களர்கள் வைத்திருக்கிறார்கள். சாலைகளை மேம்படுத்த இந்தியா ஏதாவது செய்தாக வேண்டும். ஆனால் இலங்கையில் இந்தியா மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதை அந்நாட்டு அரசு விரும்பவில்லை என்றுதான் நினைக்கிறேன். இப்போது யாழ்ப்பாணத்தில் இந்தியா தூதரகம் திறந்திருக்கிறது. யாழ்ப்பாணத் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் வர்த்தகத்தை மேம்படுத்தலாம்.

Leave a Reply