ஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை
ஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க கோரி மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டிசம்பர் 16,2012, ஞாயிறு:

இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ஜான் ஹோம்ஸ், விஜய் நம்பியார் ஆகியோரை குற்றவாளிகளாக விசாரிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை மாலை மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழினப் படுகொலையில் ஐ.நா உயர் அதிகாரிகள் இலங்கைக்கு துணை நின்றதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன. சமீபத்தில் சார்லஸ் பெட்ரி வெளியிட்ட இலங்கை பற்றிய ஐ.நா உள் விவகார அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்களும் வெளியிடப்பட்டன.மே17 இயக்கத்தின் உமர் அவ்ர்கள் பேசுகையில், மே 15, 2009 அன்று இலங்கையில் இனப்படுகொலை நடக்கப்போகிறது என இனப்படுகொலை தடுப்பு அதிகாரி ஃபிரன்சிஸ் டெங் அளித்த அறிக்கை புறக்கணிக்கப்படுகிறது. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்(OCHA-Office for the Coordination of Humanitarian Affairs) அதிகாரி ஜான் ஹோம்ஸ் அபயக் குரல் எழுப்பி தமிழர்கள் அனுப்பும் மின்னஞ்சலை படிக்காமலே அழித்து விடுவேன் எனக் கூறினார். பான் கி மூனின் உதவியாளர் மிச்செல் மோண்டாஸ், போரில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் எனக் கேட்ட்தற்கு உடல்களை எண்ணுவது எங்கள் பணியல்ல என்று கூறினார். போரில் நடக்கும் படுகொலைகளை தடுக்க, போர் முனைக்கு சென்று கவனிக்க வேண்டிய இலங்கைக்கான ஐ.நாவின் உயர் அதிகாரி விஜய் நம்பியார் தட்ப வெப்பம் சரியில்லாத்தால் போகவில்லை என கூறினார். ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீற்ல்களை தடுக்க பக்கத்து நாட்டு அதிகாரிகளை நியமிப்பதில்லை என்பதை மீறி பான் கி மூன் இந்தியரான விஜய் நம்பியாரை இலங்கையில் நியமித்தார். இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என மனித உரிமைகள் அவையின் நவி பிள்ளை உள்ளிட்டோர் கூறியபோது அதை தடுத்தவர்கள் பான் கி மூன், விஜய் நம்பியார் மற்றும் ஜான் ஹோம்ஸ்.போரின் இறுதிக் காலங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடாமல் விஜய் நம்பியார் மற்றும் ஜான் ஹோம்ஸ் தடுத்தனர் என்பன போன்ற விவரங்களை அளித்தார்.மதிமுக தொழிற்சங்க தலைவர் அந்திரிதாஸ் பேசுகையில், இந்தியாவிற்கும் ஈழப் படுகொலையில் இனப்படுகொலையில் சமபங்கு இருக்கிறதெனவும், இந்திய அரசு தான் முதல் குற்றவாளி என்றும், வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஐ.நாவும் தமிழினப் படுகொலையை கூட்டு சேர்ந்து நடத்தியது என்றும் கூறினார்.திராவிடர் விடுதலைக் கழகத்தின் தபசிகுமரன் பேசுகையில், ஐ.நா வை நாமெல்லாம் பிரச்சினைகளை தீர்த்துவைக்கக் கூடிய இடமாக பார்த்து வந்தோம். ஆனால் இப்போது ஐ.நாவே பிரச்சினைக்குரிய இடமாக நிற்கிறது. நாம் அனைவரும் நமக்கான தீர்வை நோக்கிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார்இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் பேசியபோது “கருணாநிதி மட்டும் தான் மிகப்பெரிய துரோகி என்று நினைத்தோம், ஆனால் இப்போது தான் தெரிகிறது பான் கி மூனும் மிகப்பெரிய துரோகி என்று.மேலும் இறுதிக்கட்ட நாட்களில் நடந்த போரின் போது இரவு ஏழு மணிக்கு சிங்கள அரசால் தொடங்கிய வான்வழி தாக்குதல் விடியற்காலை 
வரை தொடர்ந்தது. விடிந்த பின்பு அங்குள்ள நிலையினை பார்த்த பல பெண்கள் மயங்கி விழுந்தனர். காரணம் இரவு முழுவதும் நடந்த தாக்குதல்களால் குண்டடிப்பட்டு குழந்தைகளில் உடல் உறுப்புகள் சிதறி மரங்களின் கிளைகளில் தொங்கியது. இந்த நிகழ்வுகள் ஐ.நா அதிகாரிகளுக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.மேலும் ஐ.நா அதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார் .தமிழ்த்தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் உரையாற்றுகையில், ஐ.நா வின் கட்டமைப்பு மற்றும் வரையறைகள் பற்றியும், பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட தேசிய இனங்களின் வரலாறுகள் பற்றியும், ஐ.நா வை எதிர்த்து போராடும் போதுதான் நம் கோரிக்கைகள் முன்நகர்த்தப்படும் என்றும் பேசினார். காலத்திற்கேற்ப ஈழத்திற்கான போராட்ட முறைகள் மாற வேண்டும் என்று கூறினார்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தீரன் பேசுகையில், தமிழீழ விடுதலையின் அவசியம் குறித்தும், தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐ.நாவுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம் என்றும், இந்தியா முழுதும் உள்ள தலைவர்களுக்கு ஈழத்தை பற்றிய செய்திகளை கொண்டு சேர்ப்பதும் முக்கியம் என்றும் கூறினார். ஐ.நா சபைக்கு சென்று திமுக மனு கொடுத்தது ஏமாற்று வேலை என்றும் கூறினார்.தமிழ்த்தேச பொதுவுடைமைக் கட்சியின் அருணபாரதி பேசுகையில்,இந்திய அரசு ஒரு நாளும் தமிழர்களுக்காக உதவ முன்வராது. ஆகவே விடுதலைக்காகப் போராடும் அனைத்து தேசிய இன்ங்களும் ஒன்று சேர்ந்து நான்காம் உலக நாடுகளை உருவாக்க வேண்டும் என்று கூறினார். தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் அதியமான் பேசுகையில், தமிழீழத்திற்கு ஆதரவாக இருக்கும் திமுக, அதிமுக தவிர்த்த அனைத்து ஆதரவு சக்திகளும் இணைத்து ஒரு அணியை அமைத்து தமிழீழத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசுகையில், ஐ.நாவினுடைய இனப்படுகொலை தடுப்பு அமைப்பு செயல்படவில்லை. மனித உரிமை அமைப்புகள் இயங்கவில்லை. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் ஏமாற்றுவேலைகள் மட்டுமே நடந்தன. சர்வதேச விதிகள் எவற்றையும் ஐ.நா இலங்கையில் பின்பற்றவில்லை. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து வெளியிடாமல் ஐ.நா மறைத்து வந்துள்ளது. தொடர்ந்து தமிழர்களுக்கான நீதியை இலங்கை அரசுடன் சேர்ந்து ஐ.நா அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஐ.நா வளாகத்தில் நீதி கேட்டு தீக்குளித்த முருகதாசன் நினைவு நாளையொட்டி பிப்ரவரி 13 ம் தேதி ஐ.நாவை முற்றுகையிடும் மிகப் பெரிய போராட்ட்த்தை உலகம் முழுமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்த வேண்டும் என்று கூறினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், அனைத்து தமிழ் இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு ஐ.நா அதிகாரிகளை விசாரிக்க வேண்டும், தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பு நட்த்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.இலங்கை இனப்படுகொலை பற்றிய புகைப்பட கண்காட்சியும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த்து.








Leave a Reply